மாகந்துரே மதூஷ், அல்ரபா பொலிஸ் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலக கொலைகள், கப்பம் பெறல், கடத்தல், போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் இருக்கும் மிக முக்கிய புள்ளியான பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிலாகே மதூஷ் லக்சித்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் 6 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டனர்.
இந் நிலையில் மாகந்துரே மதூஷும் அவருடன் சிக்கிய மேலும் சிலரும் இவ்வாறு அபுதாபியில் இருந்து டுபாய்க்கு அழைத்து வரப்பட்டு டுபாய், அல் ரபா வீதி பொலிஸ் கூண்டில் அடைக்கப்பட்டடுள்ளனர்.
அத்துடன் அவருடன் சிக்கியதாக கூறபப்டும் 25 பேரில் உள்ளடங்கிய குழுவின் மேலும் பல உறுப்பினர்கள் டுபாயின் தெய்ரா பகுதியின் சலாஹ் அல்டின் வீதியில் அமைந்துள்ள அல் முரகாபாத் பொலிஸ் நிலைய கூண்டுகளில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந் நிலையில் அபுதாபியில் கைதான குறித்த 25 பேரும் டுபாய்க்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், டுபாயில் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மதூஷ் உள்ளிட்ட குறித்த சந்தேக நபர்கள் அனைவரினதும் இரத்த மாதிரிகளும் பொலிஸாரால் பெறப்பட்டு, அதில் போதைப்பொருள் அடங்கியுள்ளதா என்பதைக் கண்டறிய உயிரியல் சோதனைகள் இடம்பெறுவதாகவும்,
அதனைவிட அறிவியல் தடயங்களை மையபப்டுத்தி மதூஷ் உள்ளிட்டோர் டுபாயை மையப்டுத்தி போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனரா என அந் நாட்டு போதைப் பொருள் தடுப்புப் பணியகம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இவ்வாறு இடம்பெறும் ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவுற்ற பின்னரே, மதூஷ் உள்ளிட்டவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதா இல்லையா என அந் நாட்டு அதிகாரிகள் வெளிப்படுத்துவர்.