மகிந்த தலைமையிலான எதிரணிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் கோத்தாவின் பிரவேசம்!

215 0

இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் தனக்கிருக்கும் விருப்பத்தை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச வெளிப்படுத்தியதை அடுத்து அவரது மூத்்த சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான எதிரணிக்குள் கடுமையான பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

“மக்கள் தயாரென்றால் நானும் தயார் ” என்று கடந்தவாரம் கோதாபய பகிரங்கமாக அறிவித்த பின்னரும் அரசியலில் பேரார்வம்கொண்ட அவரின் சகோதரர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் உள்ள நாட்டம் தணிந்ததாக இல்லை. முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரான இன்னொரு மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச தம்பியாரின் அறிவிப்பு வந்த ஒரிரு தினங்களில் ” நானும் போட்டியிடத் தயாராயிருக்கிறேன்” என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்கும் கோதாபயவின் விருப்பத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் விசனமடைந்திருப்பதாக  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் அவரது  நெருக்கமான விசுவாசிகள் கூறுகிறார்கள். செல்வாக்குமிக்க ராஜபக்சாக்களின் ஆதரவுடன் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வியூகங்களை ஜனாதிபதி சிறிசேன வகுத்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி சிறிசேனவே என்று கடந்த வெள்ளிக்கிழமை கூட கட்சியின் புதிய பொதுச்செயலாளரான தயாசிறி ஜெயசேகர செய்தியாளர்களுக்கு கூறியிருந்தார்.பொது வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் உத்தேசம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். 

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் குறித்து ஊகங்கள் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு எதிரணி அரசியல்வாதிகளை சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.பி.திசாநாயக்க கேட்டிருந்தார். கோதாபயவின் பிரவேசம் குறித்து திசாநாயக்கவிடம் கேட்டபோது ” அது குறித்து பேசாமல் இருப்பதே சிறந்தது ” எனாறு பதிலளித்தார்.

ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்குவது குறித்து கடந்தவாரம்தான் கோதாபய நேரடியாக கருத்துக் கூறியிருந்தார் என்றபோதிலும், அவர் தனது உத்தியோகபூர்வமற்ற பிரசாரத்தை கொழும்பு சங்கிரி லா ஹோட்டலில் கடந்த மே மாதத்தில் தொடங்கியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் அவரின் முதல் வழக்கு விசாரணை செவவாய்க்கிழமை ஆரம்பமாகவிருப்பதற்கு முன்னதாக அவருக்கு ஆதரவான பல சமூக வலைத்தளங்கள் ” 2020 கோதா ” என்ற பிரசார சலோகத்தை வெளியிட்டிருக்கின்றன.

காலஞ்சென்ற தனது பெற்றோருக்கு நினைவாலயம் ஒன்றை சொந்த ஊரான வீரகெட்டியவில் நிறுவுவதற்கு 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை கோதாபய  முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில்  விசேட நீதிமன்றத்தின் முதன் முதலான முழு அளவிலான விசாரணை செவ்வாய்க்கிழமை ஆரகம்பமாகிறது.

கோதாபய தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இன்னமும் துறக்கவில்லை என்பதால் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான தகுதியை இன்னமும் பெறவில்லை. அமெரிக்கப் பிரஜாவுரிமையை கைவிடுவதற்கான நடைமுறைகளை இரு மாதங்களில் பூர்த்திசெய்துவிட முடியும் என்று முன்னர் அவர் கூறியிருந்தார்.ஆனால், வெளிநாட்டுப் பிரஜாவுரிமையை கைவிடுவதென்பது தனது தனிப்பட்ட விவகாரம் என்று கடந்தவாரம் செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அவர் சொன்னார். 

அமெரிக்கப் பிரஜாவுரிமையை தான் துறக்கவிரும்பினால் அதை வாஷிங்டன் தடுக்கமுடியாது என்று வாதிட்ட அவர் அமெரிக்காவை ஜனநாயகத்தி்ன் தந்தை என்று வர்ணித்ததுடன் ” அமெரிக்கப் பிரஜாவுரிமையுடன் சேர்த்து ஒருவரைக் கட்டிப்போட முடியாது ” என்றும் கூறினார்.

ஆனால், அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிடுவது காலத்தை எடுக்கின்ற ஒரு செயன்முறையாகும் என்றும் அந்த பிரஜாவுரிமையைக் கைவிடவிரும்புகிறவருக்கு எதிராக வழக்கு விசாரணை எதுவும் இல்லாமல் இருப்பதுடன் வரி நிலுவைகளும் இல்லாமல் இருந்தால் மாத்திரம் அதைச்செய்யமுடியும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a comment