புத்தளம், வனாத்தவில்லு, மங்களபுர, கரடிபுவல் பிரதேச தென்னை மர தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
அண்மையில் மாவனல்லைப் பிரதேசத்தில் புத்த சிலை சேதமாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலை வணக்கத்துக்கு எதிரான கொள்கையை கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனாத்தவில்லு பிரதேசத்தில் தென்னை மர தோட்டத்தில் இருந்து சுமார் 100 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருட்கள், மேலும் 100 டெட்டனேட்டர்களும் இரசாயன பொருட்களும் கடந்த 17ம் திகதி கைப்பற்றப்பட்டன.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.