ஜனநாயகத்தை மதிப்பதுடன் சகோதர கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் -பசில்

213 0

பொதுஜன பெரமுன முன்னணி  எதிர்வரும்  தேர்தல்களில்   எச்சின்னத்தில்  போட்டியிடும்  என்பது   தொடர்பில்  விரைவில்  கட்சியின்  தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி  சிறந்த    தீர்மானம்   முன்வைக்கப்படும்.   

கட்சியின்  உள்ளக  ஜனநாயகத்தை  மதிப்பதுடன்  சகோதர    கட்சிகளின் கருத்துக்களுக்கும்  மதிப்பளிக்க  வேண்டும்  என  பொதுஜன பெரமுன முன்னணியின்  ஸ்தாபகர்   பசில்   ராஜபக்ஷ  தெரிவித்தார்.

 பொதுஜன பெரமுன  முன்னணி  இடம்பெறவுள்ள   தேர்தலில்  மொட்டு  சின்னத்தில் போட்டியிட  வேண்டும்  என்பதை   உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்  என்ற கோரிக்கை  மனுவை  நேற்று வெள்ளிக்கிழமை   உள்ளுராட்சி  மன்றங்கள்  அமைப்பின்    தலைவர் உதேனி  அதுகோரல   முன்வைத்தார்.

பொதுஜன பெரமுன  முன்னணி  எத்தரப்புடன் கூட்டணியமைத்தாலும்  எக்காரணத்திலும்   கட்சியின்  சின்னத்தில்   மாற்றங்களை    ஏற்படுத்தக்  கூடாது.  இவ்விடயத்தில்  பொதுஜன  பெரமுன முன்னணியினை  பிரதிநிதித்துவப்படுத்துவம்  மாகாண சபை  உறுப்பினர்கள்  மற்றும்     உள்ளுராட்சி  மன்ற உறுப்பினர்கள்    ஒருமித்த   கருத்துக்களையே   முன்வைத்துள்ளனர்.  இத்தீர்மானத்தை  அனைவரும்    ஒன்றினைந்து   எடுத்துள்ளோம் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம்  தொடர்பில்   பொதுஜன பெரமுன  முன்னணியின்  ஸ்தாபகர்  பசில்   ராஜபக்ஷ   குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன  முன்னணி   தேர்தலில்  எச்சின்னத்தில்  போட்டியிட  வேண்டும் என்பது  தொடர்பில்    உள்ளுராட்சி  மன்றங்கள் ,  மாகாண சபை அமைப்புக்களும்,  சிவில்  அமைப்புக்களும் ஒருமித்த     தீர்மானத்தை முன்னெடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. 

.முன்வைக்கப்பட்டுள்ள   யோசனைகள்  அனைத்தும்  கட்சியின்    தலைமைத்துவமான   மஹிந்த ராஜபக்ஷவினாலே பரிசீலனை    செய்யப்படும்.   கட்சியின்   முக்கியத்  தரப்பினருடன் ஒன்றிணைந்து  சரியான  தீர்மானம்  ஒன்று விரைவில்  முன்னெடுக்கப்படும். 

Leave a comment