ரவிகரன் மற்றும் ஏழுபேர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

213 0

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன், மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரமாகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது.

இவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவுப் காவற்றுறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், 21.08.2018 அன்று தவணையிடப்பட்டு, அன்றைய தினம் வழக்கு விசாரணைகள் நடைபெற்று, 2018.10.30 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, பின்பு குறித்த நாளில் இடம்பெற்ற விசாரணைகளினைத் தொடர்ந்து 07.01.2019 ஆம் திகதிக்கும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேரும் இன்றையதினம் வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

Leave a comment