பிறந்த நாளைக் கொண்டாடியவர் கடலில் மூழ்கி பலி

207 0

சந்திவெளி கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் நீராடிய போது நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 06 பாலையடித்தோணா கடலில் மீட்கப்பட்ட சடலம்  வரதராஜன் ருஷான் (வயது 24) என்பவருடையது என அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

சனிக்கிழமை தனது 24 வது பிறந்த நாளைக் கொண்டாடிய ருஷான் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது மனைவி மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு பாலையடித்தோணா கடற் கரைக்குச் சென்றுள்ளார்.

அவ்வேளையில் இவரும் உறவினர்கள் சிலரும் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடல் அலையில் அள்ளுண்டு இவர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உறவினர்களும் மீனவர்களுமாகச் சேர்ந்து கடலில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டபொழுது சடலத்தை மாத்திரமே மீட்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்டவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு, உடற்கூறாய்வுப் சட்ட வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment