பௌத்த மத புனித நூலான திரிபீடகத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான தேசிய தினம் எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக்கிழமை மாத்தளை அலுவிகாரையில் இடம்பெறவுள்ளதாக புத்த சாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
ஜனாதிபதி செயளகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் பௌத்த மத புனித நூலான திரிபீடகத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டது. அதற்கான அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த விடயம் தொடர்பாக முன்னதாகவே அறிவித்திருந்தார். அதன்படி 5 திகதி இவ் உற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உற்சவ தினத்தன்று நாடளாவிய ரீதியிலுள்ள சலக அரச நிறுவனங்கள் மற்றும் பௌத்த விகாரைகளில் பௌத்த கொடி ஏற்றப்பட வேண்டும். அத்தோடு அனைத்து விகாரைகளிலும் பூஜை வழிபாடுகளும் இடம்பெறும். மாத்தளை அலுவிகாரையில் இடம்பெறவுள்ள இந்த உட்சவத்தில் கலந்துகொள்வதற்கு சுமார் 2000 பௌத்த மதகுருமார்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


