சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

226 0

பாடசாலை சிறுவர்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுவந்த போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இளைஞரொருவர் நிட்டம்புவ பொலிஸாரால் இன்றைய தினம் கட்டகாவல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைவாக பாடசாலை சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பழக்கம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவந்த விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கம்பஹா மாவட்ட நிட்டம்புவ பிரதேசத்தில் காணப்படும் 100 பாடசாலைகளில் போதைப்பொருள் தடுப்பு பெற்றோர் அமைப்பொன்று உருவாக்கப்பட்டது. 

இந்த அமைப்பின் உதவியுடன் 2019 ஆண்டுக்காக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் வருகை தந்திருந்த வேளையில் அவர்களின் பாடசாலை பைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. 

குறித்த சோதனை நடவடிக்கையின் போது நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 11 ஆம் தரத்தில் படிக்கும் மாணவரொருவரின் புத்தக பையிலிருந்து 1100 மில்லிகிராம் நிறையுடைய கஞ்சா பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இதனையடுத்து குறித்த மாணவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இம்மாணவருக்கு அப்பொதியை பெற்றுக்கொடுத்த இளைஞரொருவர் அடையாளங்காணப்பட்டு, நிட்டம்புவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கட்டகாவலபிட்டிய லெப-ஆர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சமீர மகேஷ் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பான வலைமையமைப்பை கண்டறியும் விசேட விசாரணைகள் நிட்டம்புவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தவுள்ளனர். 

Leave a comment