உலகில் முதன் முறையாக பிரேசில் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு இறந்தவரின் கர்ப்பப்பை மூலம் குழந்தை பிறந்துள்ளது.
சர்வதேச அளவில் 10 முதல் 15 சதவீத பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களில் 500 பேரில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை கோளாறினால் இப்பிரச்சினை எழுகிறது. அவர்களுக்கு கர்ப்பபை மாற்று ஆபரேசன் மூலம் குழந்தைபெறும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிறவிலேயே கர்ப்பப்பை இல்லை. எனவே அவருக்கு வலிப்பு நோயால் இறந்த 45 வயது பெண்ணின் கர்ப்பபை தானமாக பெறப்பட்டு ஆபரேசன் நடத்தப்பட்டது.
இதற்கு முன்பு அமெரிக்கா, செக் குடியரசு, துருக்கி ஆகிய நாடுகளில் இறந்த பெண்களிடம் இருந்து தானம் பெற்று 10 பேருக்கு இத்தகைய ஆபரேசன் நடத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. தற்போது இப்பெண்ணுக்கு வெற்றிகரமாக குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 2 கிலோ 550 கிராம் எடை உள்ளது.