தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களுக்கு எதிராகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவுமே செயற்படுகின்றனர். வடக்கு , கிழக்கிற்கு கடந்த மூன்று வருடகாலமாக எவ்வித அபிவிருத்திகளையும் முன்னெடுக்காத ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் கூட்டணியமைப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மக்களுக்கு பெற்றுக் கொடுத்த அரசியல் ரீதியான உரிமைகளை தேசிய அரசாங்கம் பறித்தது. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணிளும் ஆதரவு வழங்கினார்கள் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் தேர்தல் இடம் பெற்றால் தமது நிர்வாகம் அப்பிரதேசத்தில் இடம் பெறாது என்று மஹிந்தவிற்கு பல தரப்பினர் எடுத்தரைத்தார்கள். ஆனால் அவர் அதனை நிராகரித்தார்.
தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் தேர்தல் உரிமையினை வழங்க வேண்டும். தமக்கான பிரதிநிதியை அவர்களே தெரிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு மக்களானையினை முன்னெடுத்தார். ஆனால் அவர் வழங்கிய அரசியல் உரிமைகளும் இன்று அப்பிரதேச மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியுமே பொறுப்பு கூற வேண்டும் என்றார்.