சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்தை வழிநடத்திச் செல்லவேண்டும். முடியாவிட்டால் பதவி விலகி சுயாதீனமாக செயற்படக்கூடிய ஒருவரை நியமித்துக்கொள்ள இடமளிக்கவேண்டும் என பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
பாராளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதே சபாநாயகரின் கடமையாகும். ஆனால் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கும் வகையிலே செயற்பட்டு வருகின்றார்.
பாராளுமன்றத்தில் கடந்த 3 தினங்கள் பிரச்சினை ஏற்பட காரணமாக இருந்ததும் சபாநாயகரின் நடவடிக்கையாகும். அவர் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் சுயாதீனமாக செயற்பட்டிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்றார்.

