சர்வதேச நாடுகளினது கைப்பொம்மையாக சபாநாயகர் மாறிவிட்டார் – தயாசிறி

262 0

சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நேரங்களில்  வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பது பாராளுமன்ற விதிமுறைகளை முற்றிலும் மீறும் செயற்பாடாகும். ஜனநாயகம் பற்றி அதிகம் தெரிந்தவர் இவ்வாறு ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளினதும், அமைப்புகளினதும் கைப்பொம்மையாக  சபாநாயகர் மாற்றப்பட்டு விட்டார் எனவும் அவர் சாடினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பில்  இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சபாநாயகர் மிகவும் நல்ல மனிதர், எம் அனைவரை விடவும் ஜனநாயக ரீதியில் செயற்படத் தெரிந்த மனிதர். அவர் மீது எமக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.

எனினும் அண்மைக் காலமாக அவர் ஒரு சபாநாயகர் என்ற வரம்பை மீறி செயற்பட்டு வருகின்றமை முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அவரது அதிகாரங்களை சரியாக ஜனாதிபதி கையாண்டு வருகின்றார். அவ்வாறு இருக்கையில் இப்போது பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் எந்தவித அரச முறை சந்திப்புக்களையும் முன்னெடுக்க முடியாது.

எனினும அவர் வேறு நாட்டு  தூதுவர்களை சந்தித்து இலங்கை குறித்து தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இந்த சந்தர்ப்பங்களை சர்வதேச நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி நாட்டில் நிரந்தர குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆகவே சபாநாயகர் கரு ஜயசூரிய தனது கடமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.

Leave a comment