மகிந்தவின் மீள் வருகை மனித உரிமைமீறல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

283 0

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை கடந்த காலத்தில் அவரது ஆட்சியின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்த ஜனாதிபதிசிறிசேனவின் திடீர் அறிவிப்பு நாடாளுமன்றத்திற்கோ அமைச்சரவைக்கோ அறிவிக்காமல் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம் ரணல் விக்கிரமசிங்க இது அரசமைப்பையும் நாடாளுமன்ற நடைமுறைகளையும் மீறிய நடவடிக்கை  என தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு நீதி வழங்கப்படாத நிலையில் ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளமை இலங்கையின் மனித உரிமை நிலவரத்தின் எதிர்காலம் குறித்து அச்சமேற்படுத்தும் கரிசனைகளை உண்டுபண்ணியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் யுத்த குற்றங்களை அனுபவித்தவர்களிற்கு நீதி வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளமை காரணமாக கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீண்டும அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழல’ மீண்டும் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக அரசாங்கத்தின்  அழுத்தங்கள் இன்றி செயற்பட்டு வந்த ஊடக அமைப்புகள்,மனித உரிமை அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகள் மீண்டும் அச்சம் நிலவும் காலத்தினை எதிர்கொள்ளவேண்டிய நிலை குறித்து அச்சமடைந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகளவிற்கு மனித உரிமைகளை மதிக்கும்  ஆட்சி நிலவுவதை உறுதி செய்வதில் பங்களிப்பு வழங்கிய நாடுகள் கடந்த சில வருடங்களில் பெறப்பட்ட நன்மைகள் இழக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச பிரதமரான பின்னர் அவரது ஆதரவாளர்கள் அரச ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளன என தகவல்கள் கிடைத்துள்ளன என  சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.சிறிசேன அரசாங்கத்தின் கீழ் அரச ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட்டன எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

ராஜபக்சவின் நியமனத்தை ரணில்விக்கிரமசிங்க எதிர்த்துள்ளதை அரச ஊடகங்கள் தெரிவிக்கவில்லை எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Leave a comment