தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை முற்றுகையிட்ட 15 மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை அப்பல்கலையின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த சில சிங்கள மாணவர்கள் கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்து போராடி வருகின்றனர்.
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த 4 மாணவர்களை மீளவும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியே மேற்படி மாணவர்கள், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்து, அதனை ஆக்கிரமித்து போராடி வருகின்றனர்.
இதன் காரணமாக, பல்கலைக்கழக நிருவாக மற்றும் நிதி நடவடிக்கைகள் கடந்த இரு வாரங்களாக முடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு பொலிஸாருக்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே கட்டளை பிறப்பித்திருந்த போதிலும் மாணவர்கள் அங்கிருந்து வௌியெற்றப்படவில்லை.
இந்நிலையிலேயே பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

