விடுதலைப் புலிகளின் கொடியை காண்பித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை- சம்பிக்க

303 0

பிரிட்டனில்  சமீபத்தில் விடுதலைப்புலிகளின் கொடியை காண்பித்தமைக்காக கைதுசெய்யபட்ட நான்கு தமிழர்களிற்கு எதிராக அந்த நாடு கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்

பிரிட்டனிற்கான விஜயத்தின் போது ஆசிய பசுவிக்கிற்கான அமைச்சர் மார்க் பீல்டை சந்தித்தவேளை சம்பிக்க ரணவக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் நால்வர் விடுதலைப்புலிகளின் கொடியை காண்பித்து ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைதுசெய்யப்பட்டமை குறித்தே  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமைச்சர் விடுதலைப்புலிகளின் கொடிகளை காண்பித்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் பிரிட்டிஸ் அரசாங்கம் ஆதரவளித்து வரும்  இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்ககூடியவை என அமைச்சர் தெரிவித்தள்ளார்

பிரிட்டன் தனது பயங்கரவாதத்திற்கு எதிரான  சொந்த சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ள சம்பிக்க ரணவக்க ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.ஜெனிவா தீர்மானம் குறித்த தனது அர்ப்பணிப்பை  இலங்கை அரசாங்கம் சிறப்பாக  நடைமுறைப்படுத்தி வருகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment