நாமல் குமாரவின் இந்திய நண்பர் ஒருவர் இலங்கையில் CID அதிகாரிகளினால் கைது

324 0

ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சம்பவத்தை அம்பலப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரகேயுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்தியர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

53 வயதுடைய இந்தியரான இவர் நீண்ட நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த ஒருவராவார் எனவும் கூறப்படுகின்றது. நேற்று (21) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் இந்தியாவில் இயங்கும் அரச விரோத அமைப்பொன்றின் உறுப்பினர் எனவும், இந்தியாவில் தனக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் தலைமறைவாகியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் அகதி அந்தஸ்தைக் கோரிய போதிலும் அது தனக்குக் கிடைக்கவில்லையெனவும் குறித்த இந்தியர் கூறியுள்ளார்.

நாமல் குமாரவின் ஊடக அறிவிப்பு தொடர்பில் தனக்கு அறியக் கிடைத்ததாகவும் இது தொடர்பில் கேட்டறிய அவரது வறக்காபொல வீட்டிற்கு பல தடவைகள் சென்றதாகவும் இருந்தும், அவரைச் சந்திக்கக் கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவும் இதனால், இவரைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளது.

Leave a comment