பொலிஸ் மாஅதிபர் மீது முன்வைக்கப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவைகள் என்றும், குற்றச்சாட்டு உள்ளதென்பதற்காக அவர் தொடர்பிலான நல்ல செயற்பாடுகளை பாராட்டாமல் இருக்க முடியாதெனவும் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மாஅதிபரிடம் குறைபாடுகள் இருக்கலாம், அதற்காக வேண்டுமென்றே அவர் மீது சிலர் சேறு பூசி வருகிறார்கள். கண்டி பெரஹெரவின்போது ஆடாமல் சென்ற நடனக் கலைஞர்களை ஆடுமாறு அவர் கையை ஆட்டி சைகையில் காட்டியதை மட்டும் காட்சிப்படுத்தி பொலிஸ் மா அதிபர் நடனமாடுவதாக பிரசாரம் செய்தார்கள்.
அதேபோன்று அவர் பாடசாலையொன்றில் ஆற்றிய உரையின் சில வசனத்தை மட்டும் எடுத்து வேறு அர்த்தம் புலப்படும் வகையில் அதனை காட்சிப்படுத்தி சேறு பூசி வருகிறார்கள். அந்த உரை முழுவதையும் நான் கேட்டுப்பார்த்தேன். உண்மையில் அது கருத்துள்ள உரையாகவே காணப்பட்டது.
எனக்குத் தெரிந்த வரை பொலிஸ் மாஅதிபர் தனது உரிமைகளைப் பெறக்கூட அதிக ஆர்வம் காட்டாத ஒருவர். இன்னமும் சாதாரண காரிலேயே பயணம் செய்கிறார். அண்மையில்கூட அமைச்சர் காரை ஏன் மாற்றக்கூடாது என கேட்டதற்கு, இது போதும் என்று சாதாரணமாக பதிலளித்தவர் அவர்.
அவர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான 129 பொலிஸ் அதிகாரிகளுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுத்தவராவார்.