கலஹா தெல் தோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது பச்சிளம்பாலகன் சங்கர் சஜியின் பூதவுடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது பெருமளவிலான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்திய அதேவேளை இறுதிக்கிரியைகளிலும் பங்கேற்றிருந்தனர்.
கடந்த 28ஆம் திகதி கலஹா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாததால் குழந்தை உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பேராதனை வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி அமல் உதயநாத் ஜயவர்தனவின் பகிரங்க தீர்ப்பினையடுத்தே குழந்தையின் பூதவுடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.
சம்பவ தினமான கடந்த 28 ஆம்திகதி கலஹா வைத்தியசாலை வைத்தியர்களின் கவனயீனத்தால்தான் குழந்தை உயிரிழந்தது என தெரிவித்து ஆத்திரம் கொண்ட பிரதேச வாசிகள் வைத்தியசாலையை சூழ்ந்து கடும் ஆர்ப்பாட்டத்தையும் தாக்குதல்களையும் நடத்தினர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின்போது வைத்தியசாலை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான கட்டட உடமைகள் சேதமடைந்திருப்பதாக பொலிஸாரின் மதிப்பீடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலையின் பொது உடமைகளுக்கு சேதம் விளைவித்த ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.