மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமை தொடர்பான எல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெறவுள்ளது.
இந்நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றால் குறித்த எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணியும் கூட்டு எதிரணியும் தீர்மானித்துள்ளன. அதேபோன்று சிறுபான்மை கட்சிகளும் எதிராக வாக்களிப்பதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்தன. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.
மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமையின் எல்லை நிர்ணய அறிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் சிறுபான்மை இன மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ள தாகவும் கூறி புதிய தேர்தல் முறைமைக்கு சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் பழைய முறைமைக்கு மீண்டும் செல்வது உகந்தது அல்ல. ஆகவே புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளன. புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உறுதியாக உள்ளார்.
தேர்தல் முறைமை தொடர்பாக பல தடவை கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற போதும் இணக்கபாடு எட்டப்படவில்லை. இதனால் இறுதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் புதிய தேர்தல் முறைமையின் எல்லை நிர்ணய அறிக்கையை வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்து வாக்கெடுப்பும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை நிறைவேற்றுதாயின் சபைக்கு வருகை தராத பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவையாகும்.
புதிய முறைமைக்கான எல்லை நிர்ணய அறிக்கைக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை என்றால் பழைய முறைமை மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும். அதனை நிறைவேற்றுவதற்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.
இதன்படி பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களுக்கு உரித்துரிமை உள்ள கட்சியான ஐக்கிய தேசியக் முன்னணியின் நிலைப்பாடு எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்ற அத்தியாவசியமாகும்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் முன்னணியினதும் கூட்டு எதிரணியினதும் பாராளுமன்ற மன்ற குழு கூட்டங்கள் நேற்று காலை பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நடைபெற்றன. ஐக்கிய தேசியக் முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இதன்போது இன்று விவாதத்திற்கு எடுத்து வாக்கெடுப்பு நடத்த உத்தேசித்துள்ள புதிய தேர்தல் முறைமையின் எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.
என்றாலும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன எதிராக வாக்களிக்கும். அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியனவும் எதிராக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற குழு கூட்டமும் நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போதும் புதிய தேர்தல் முறைமைக்கான எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டது.
எனினும் புதிய தேர்தல் முறைமைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.