தொலைபேசி அழைப்பு பற்றி கேட்டனர், நான் நினைவில் இல்லை என்றேன் -மஹிந்த

192 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று (17) மூன்று மணி நேரம் வாக்கு மூலம் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள வீட்டில் வைத்தே இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஐந்து அதிகாரிகள் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த வாக்கு மூலத்தை பெறுவதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு கரு ஜயசூரியவும், அலககோனும் தொலைபேசி அழைப்பில் தொடர்பு கொண்டதாகவும் அதனையடுத்து கீத் நொயார் விடுதலை செய்யப்பட்டதாகவும் இவ்வாறு நடந்த சம்பவம் உண்மையா ? எனவும் தன்னிடம் கேட்டதாக மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. வாக்கு மூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.

தனக்கு அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டமை குறித்து நினைவில் இல்லையென தெரிவித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment