லண்டனில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளியாக்கப்பட்ட மாணவி

289 0

அன்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்வி கற்கும் ஆர்வத்தில் ரோமானியாவிலிருந்து லண்டன் வந்தார். கல்விக்கான ஏக்கம் கண்களில் விரிய லண்டனுக்கு வந்த அவரின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகிவிட்டது.

கல்விக்காக பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அன்னா, உணவு விடுதிகளில் பேரராகவும், சுத்தம் செய்பவராகவும், கணக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

2011 ஆண்டு மார்ச் மாதம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அயர்லாந்துக்கு கடத்திச் செல்லப்பட்ட அவர், 9 மாதங்கள் நரக வேதனையை அனுபவித்தார்.

மதிய உணவுக்காக வீட்டிற்கு கிளம்பிய அன்னா, சாப்பிட்ட சிறிது நேரத்தில் அடுத்த வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. காதில் ஹெட்போனை மாட்டி இசையை ரசித்துக் கொண்டே நடந்து சென்றுக் கொண்டிருந்த அவர், வீட்டை நெருங்கியதும், பர்ஸில் இருந்து சாவி எடுத்தார். பின்னால் இருந்து அவரது கழுத்தை பிடித்து, வாயைப் பொத்தி இழுத்துச் சென்ற சிலர், அவரை சிவப்பு நிறக் காரில் ஏற்றி கடத்திச் சென்றார்கள்.

இரு ஆண்களும், ஒரு பெண்ணும் சேர்ந்து அன்னாவை கடத்தினார்கள். ரோமானிய மொழியில் பேசிய அவர்கள், ‘கத்தாமல் வாயை மூடிக்கொண்டு வா, இல்லாவிட்டால், ரோமானியாவில் இருக்கும் உன் குடும்பத்தினரை கொன்று விடுவோம்’ என்று மிரட்டினார்கள்.

“என்ன நடக்கிறது, எங்கே அழைத்துச் செல்கிறார் என்றே புரியவில்லை. மனதில் பல்வேறுவிதமான அச்சங்கள் எழுந்தன. பாலியல் பலாத்காரம் செய்யவதற்காக கடத்துகிறார்களா? உறுப்பு திருடும் கும்பலா, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலா இல்லை என்னை கொலை செய்யப் போகிறார்களா? என அச்சமடைந்தேன்” என்று சொல்கிறார் அன்னா.

அவர்கள், அன்னாவின் கையிலிருந்த பர்ஸையும், மொபைல் போனையும் சோதித்து பார்த்தனர். அவருடைய போனில் இருந்த தொலைபேசி எண்கள், ஃபேஸ்புக்கில் இருந்த தொடர்புகள் என அனைத்தையும் நோட்டம் விட்டனர். அது மட்டுமல்ல, அன்னாவின் பாஸ்போர்டும் அவர்களின் கைகளில் சிக்கிவிட்டது.

காரில் இருந்து தப்பி ஓட வாய்ப்பு இருக்கிறதா என்பதை கவனித்துக் கொண்டே இருந்தார் அன்னா. ஆனால் விமான நிலையத்திற்கு செல்லும் வரை அன்னாவுக்கு தப்பிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. விமான நிலையத்திற்குள் நுழையும்போது, அவருடன் ஒரேயொரு நபர் மட்டுமே இருந்ததால், சற்றே நம்பிக்கை துளிர்த்தது. அங்கு எப்படியாவது, யாரிடமாவது உதவி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கை எழுந்தது.

“அச்சத்தில் உறைந்திருக்கும்போது கத்துவதற்கு கூட பயமாக இருந்தது. என்னுடைய ஆவணங்கள் அனைத்துமே அவர்களிடம் சிக்கியிருந்தது. என் குடும்பம் எங்கே இருக்கிறது, குடும்பத்தினரின் தொலைபேசி எண்கள், என்னைப் பற்றிய தகவல்கள் எல்லாமே அவர்களுக்கு கிடைத்துவிட்டது.

செக்-இன் கவுண்டரில் நின்றிருந்தபோது, அழுது முகம் சிவந்திருந்த அன்னாவின் நிலைமையை அங்கிருந்த விமான நிலைய பணிப்பெண் கவனிக்கவில்லை. அன்னாவுடன் இருந்த நபர் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை கொடுத்ததும், சரிபார்த்தபின் சிரித்தவாறே ஆவணங்களை திருப்பிக் கொடுத்துவிட்டு தனது வேலையில் மூழ்கிப்போய்விட்டார் விமான நிலைய பணிப்பெண்.

பார்ப்பவர்களுக்கு கடத்தல்காரர் அன்னாவின் கணவர் என்றே தோன்றும்படி அவரது நடவடிக்கைகள் இருந்தன. விமானத்தின் கடைசி வரிசை இருக்கைகளை தேர்ந்தெடுத்திருந்த நபர், கத்தினாலோ, கடத்தப்படும் விஷயத்தை யாரிடமாவது சொன்னாலோ கொன்று விடுவதாக மிரட்டினார்.

அச்சம்

விமானம் அயர்லாந்துக்கு போவதாக விமான ஓட்டி அறிவிக்கும்போதுதான் தான் செல்லும் இடம் எது என்று அன்னாவுக்கு தெரிந்தது. அதற்கு முன் அந்த பெயரை கேள்விப்படாத அன்னா, என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து போய்விட்டார்.

விமான நிலையத்தில் இருந்து எப்படியாவது தப்பித்துவிட முடிவு செய்தார் அன்னா. ஆனால் சென்று இறங்கிய விமான நிலையமோ ஒரு பேருந்து நிலையத்தைப் போன்று சிறியதாக இருந்ததைக் கண்டு ஏமாற்றமே எஞ்சியது. அங்கு ரோமானியாவை சேர்ந்த வேறு இருவர் காத்துக் கொண்டிருந்தனர்.

“இவளாவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறாள்” என அவர்களில் பருமனாக இருந்தவர் சொன்னபோதுதான் தான் கடத்தப்பட்டதற்கான காரணம் அன்னாவுக்கு புரிந்தது.

ஒரு அழுக்கான மோசமான வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றார்கள். சிகரெட், மது, வியர்வை என கலவையான துர்நாற்றம் வீசிய அறையில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரருகே இருந்த மேசையில் நிறைய போன்கள் இருந்தன. அவை தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தன.

மிகவும் குறைவான ஆடை அணிந்திருந்த பல பெண்கள் அருகில் இருந்த அறைகளில் இருந்தது தெரிந்தது.

இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள்

ஒரு பெண்ணும் சில ஆண்களும் அன்னாவின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து, உள்ளாடைகளுடன் புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றியது பிறகுதான் அன்னாவுக்கு தெரியவந்தது.

சொந்த பெயரே மறந்துபோகும் அளவுக்கு நதாலியா, லாரா, ரஷேல், ரூபி என பல சந்தர்ப்பங்களில் பல பெயர்கள் அவருக்கு சூட்டப்பட்டன. பெயர் மட்டுமா? வயது 18, 19, 20… நாடும் மாறிக் கொண்டே இருந்தது. லாட்வியா, போலந்து, ஹங்கேரி…

நூற்றுக்கணக்கான ஆண்களுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொள்ளும் நிர்பந்தம். பல மாதங்கள் வரை இருட்டறை வாசம். வாடிக்கையாளர்கள் நினைத்த நேரத்தில் வந்து போவார்கள். வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் மட்டுமே தூங்க அனுமதி. ஒரு நாளைக்கு குறைந்தது 20 வாடிக்கையாளர்களாவது அன்னாவின் அறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ஒரு மணி நேரம் அன்னாவுடன் செலவிட 160-200 யூரோக்கள் வரை பணம் கொடுக்கும் வாடிக்கையாளர்களில் சிலர் அன்னாவிடம் இருந்து விலகிப் போகும்போது, அவரின் உடலில் இருந்து ரத்தம் வடியும், அல்லது நிற்கக்கூட தெம்பு இல்லாத அளவுக்கு தொய்ந்து போயிருப்பார். கடுமையான வலியால் அவதிப்படும் அன்னா, இன்னும் சற்று நேரத்தில் இறக்க நேரிடலாம் என்று நினைப்பாராம்.

அது மட்டுமல்ல, சில நாட்களில் அன்னா பட்டினியாகவே இருக்க வேண்டும். ஏன் தெரியுமா? தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வந்துக் கொண்டிருக்கும்போது, உணவு அனுப்பப்படாது. சில நாட்களில் ஓரிரு ரொட்டித் துண்டுகள் அல்லது வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பின் எஞ்சியிருக்கும் எச்சிலை சாப்பிட வேண்டியிருக்கும்.

எந்த இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறார், இசை பிடிக்குமா, பிடித்தவை என்ன என சில வாடிக்கையாளர்கள் இயல்பாகவும் பேசுவார்களாம். ஆனால் அன்னாவும், அவரைப் போன்று பிற பெண்களும் விருப்பத்திற்கு எதிராக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தாலும் அதை அவர்கள் பெரிதாக கண்டுக் கொள்ள மாட்டார்கள்.

அன்னாவின் உடலின் பல இடங்களிலும் காயங்களை ஏற்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அவர் உடலின் பழைய காயங்கள் இருப்பதை பார்த்தவாறே புதிய காயங்களை ஏற்படுத்திச் செல்லும் அந்த காமக் கொடூர மனிதர்களை வெறுத்தார் அன்னா.

சரியான உணவோ, போதுமான உறக்கமோ இல்லாததால் அன்னாவின் எடை விரைவில் குறைந்தது. ஒரு கட்டத்தில் மூளை சிந்திப்பதையே நிறுத்திவிட்டதோ என்று தோன்றுமாம்!!

அன்னா அங்கு அடைக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒரு நாள் திடீரென தொலைபேசிகள் வழக்கத்தை விட அதிகமாக ஒலித்தன, முதலாளிகள் பரபரப்பானார்கள். சற்று நேரத்தில் போலீஸ் ரெய்ட் வந்தது. ஆனால் போலீசார் வரும்போது முதலாளிகள் யாரும் அங்கு இல்லை. இருந்த பணத்தையும் லேப்டாப் மற்றும் போன்களை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டனர்.

போலீஸ் வருவது அவர்களுக்கு முன்னரே தெரிந்தது எப்படி என்று அன்னாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்த பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த இடத்தையும், பயன்படுத்தப்பட்டு வீசப்பட்டிருந்த ஆணுறைகளையும், ஆங்காங்கு கிடந்த உள்ளாடைகளையும் புகைப்படம் எடுத்த போலீசார், அன்னாவையும், கைது செய்த பிற மூன்று பெண்களையும் ஆடை அணிந்துக் கொண்டு தங்களுடன் வரச் சொன்னார்கள். தங்களிடம் அணிந்துக் கொள்ள ஆடையே இல்லை என்பது அப்போதுதான் அன்னாவுக்கு உறைத்தது.

ஒருவிதத்தில் அன்னாவுக்கு மகிழ்ச்சியே ஏற்பட்டது. கொடுமைக்காரர்களிடம் இருந்து தப்பித்துவிட்டோம், போலீசாரிடம் உண்மையைச் சொல்லி குடும்பத்திடம் திரும்பி விடலாம் என்று நினைத்தார்.

தங்களின் நிலையையும், அணியக்கூட ஆடை இல்லாத அவலத்தையும், கடத்தப்பட்டு விருப்பத்திற்கு மாறாக தங்க வைக்கப்பட்டிருப்பதையும் அன்னா போலீசாரிடம் சொன்னார். ஆனால் அவர்கள் அன்னா சொன்னவற்றை நம்பத் தயாராக இல்லை.

கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் அன்று இரவு சிறையில் வைக்கப்பட்டு, அடுத்த நாள் காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டபட்ட அவர்கள், சில மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இப்படி ரெய்டுகள் நடத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும், பிறகு நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு விடுவிக்கப்படுவதும் வழக்கமான நடைமுறை என்பது புரிந்துவிட்டது.

எப்படியோ நரகத்தில் இருந்து தப்பிவிட்டோம் என்ற நம்பிக்கையுடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்தபோது வாசலில் காருடன் அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். செல்வதற்கும் வேறு இடமும் இல்லை, அணிவதற்கு ஆடைகள் கூட இல்லை. வேறு வழி? நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக மீண்டும் தொழிலுக்கு தள்ளப்பட்டார்கள். காவலில் இருந்த ஒரு நாள் இரவு மட்டும் அவர்களுக்கு பாலியல் தொழிலில் இருந்து விடுமுறை கிடைத்தது.

தாயின் நிலைமை

இதனிடையில், அயர்லாந்தில் இருந்த விபச்சார விடுதி ஒன்றில் இருந்து ரோமானியாவை சேர்ந்த சில பெண்கள் கைது செய்யப்பட்ட தகவல் ரோமானியாவில் இருந்த அன்னாவின் தாய்க்கு தெரியவந்தது. அதில் அன்னாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அன்னாவின் பேஸ்புக்கில் அறைகுறை ஆடைகளுடனும் இருந்த அவருடைய புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தன.

அயர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு, நன்றாக சம்பாதித்து வருவதாக அன்னாவே பெருமையாகக் சொல்வதுபோல் கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தன. அன்னாவை கடத்தியவர்கள் லேப்டாப்பில் இதுபோன்ற விஷமத்தனமான விஷயங்களை பகிர்ந்திருந்தார்கள்.

அதாவது அன்னா எப்படியாவது யாரையாவது தொடர்பு கொண்டாலோ அல்லது யாரிடமாவது உண்மையைச் சொன்னால் அதை நம்பாமல் இருக்க செய்வதற்கான முயற்சி அது.

இந்த புகைப்படங்களை அன்னாவின் அம்மா மட்டுமல்ல, அவளுடைய உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரும் பார்த்திருந்தார்கள். அன்னாவைப் பற்றிய வெறுப்புணர்வுதான் அவர்கள் மனதில் ஏற்பட்டது.

“என் அம்மா ரோமானியா போலீசாரிடம் அணுகி என் மீது புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர்களோ, வயது வந்த பெண், அதிலும் வெளிநாட்டில் இருப்பதால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது, வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை முடிவு செய்வது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று சொல்லி கைவிரித்து விட்டார்கள்.

“நான் கடத்தப்பட்டிருக்கலாம்; விருப்பத்திற்கு எதிராக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் யாருக்குமே ஏற்படவில்லை” என்கிறார் அன்னா.

ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டதால் ஃபேஸ்புக் நிர்வாகத்தினர் அன்னாவின் கணக்கை நீக்கிவிட்டனர்.

நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் வெவ்வேறு இடத்திற்கும், நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் பாலியல் கொடுமைகள் மட்டும் மாறமால் தொடர்ந்தன.

இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன பெரிய கொடுமை நடந்துவிட முடியும் என்ற விரக்தியில் இருந்தார் அன்னா. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அன்னாவை அனுப்ப திட்டம் தீட்டப்படுவது புரிந்ததும், நிலைமை மேலும் மோசமாகலாம் என்பதை புரிந்துக் கொண்டார் அன்னா.

அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும், மீறினால் என்ன உயிர் தானே போகும் என்று துணிந்த அன்னா, அங்கிருந்த செருப்புகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு அனைவரும் அசந்திருந்த நேரத்தில் மெதுவாக கதவைத் திறந்துக் கொண்டு வெளியேறினார்.

யாரும் பார்ப்பதற்கு முன் விரைந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தாலும், சோர்ந்தும், நலிந்தும் போயிருந்த அன்னாவால் விரைவாக நடக்க முடியவில்லை. ஆனால் உடலில் இருந்த பலம் அனைத்தையும் காலில் செலுத்தி நடக்கத் தொடங்கினார் அன்னா.

தான் தங்க வைக்கப்படிருக்கும் ஊர் எது என்றோ, இடம் எது என்றோ தெரியாத நிலையிலும், சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுடைய இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதும் வழக்கம். அப்போது கட்டடங்களையும், தெருக்களையும் அடையாளம் கண்டு வைத்திருந்தார் அன்னா.

அன்னாவிடம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தவர்களில் ஒருவர் போதை மருந்து வியாபாரி அண்டி. அவனுடைய நண்பன் ஒருவன் விபச்சாரத்தை ஒழித்துக்கட்ட விரும்பினான். அவனுக்கு அதற்காக தகவல்கள் தேவைப்பட்டன.

அன்னாவிடம் வரும் அண்டி, பேசிக்கொண்டிருப்பான்; பாலியல் ரீதியாக அணுகமாட்டான்.

“அந்த நேரத்தில் நான் சற்று சமயோசிதமாக செயல்பட்டேன். அண்டியிடம் சென்று அடைக்கலம் கோரினேன். எனக்கு அவன் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் வேறு எந்த வழியுமே என் முன் இல்லை” என்று சொல்கிறார் அன்னா.

அண்டியின் உதவியுடன் தனது தாயை அன்னா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். எதிர்முனையில் தாயின் நண்பர் பேசினார். இனிமேல் தங்களை தொடர்பு கொள்ளவேண்டாம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்திக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் அன்னாவை கடுமையாக திட்டினார்.

அன்னாவை கடத்தியவர்கள், அவளுடைய தாயை தொடர்பு கொண்டு அச்சுறுத்தியிருக்கின்றனர். “இந்த தகவல் எனக்கு தெரிந்ததும், சரி இனிமேல் அவர்களிடம் இருந்து தொலைபேசியில் மிரட்டல் வந்தால், நான் இறந்துவிட்டதாக சொல்லுங்கள் என்று கூறிவிட்டேன்” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் அன்னா.

அன்னாவிடம் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்கள் எதுவுமே இல்லை. தொலைபேசியில் போலீசாரை தொடர்பு கொண்டு தனக்கு நடந்த கொடுமைகளை எடுத்துச் சொன்னார் அன்னா. அன்னாவின் நல்லநேரம், அவர் சொன்னதில் போலீசாருக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது.

மூத்த போலீஸ் அதிகாரியை பொது இடத்தில் வந்து சந்திக்குமாறு அன்னாவிடம் கூறிய போலீசார் ஒரு உணவு விடுதியை குறிப்பிட்டு அங்கே வருமாறு சொன்னார்கள்.

போலீஸ் அதிகாரியிடம் பேசியபோது, தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட அன்னா, தனக்கு நடந்த எல்லா கொடுமைகளையும் கோர்வையாக எடுத்துச் சொன்னார்.

கடத்தியவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களின் பெயர்களையும் அடையாளத்தையும் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுக்கச் சொன்னார் அதிகாரி. பெயர்களை படித்துப் பார்த்த அவர், அவர்கள் அனைவரும் போலீசாரின் தேடுதல் பட்டியலில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள் என்பது தெரிந்து அதிர்ந்து போனார்.

போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இரண்டு ஆண்டுகளில் அன்னாவை கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் கைது செய்யப்பட்டவர்களால் தனக்கும், தனது தாய்க்கும் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சிய அன்னா அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தார்.

அன்னாவுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு பெண் நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார். ஆட்கடத்தல், பாலியல் தொழிலில் கட்டாயமாக பெண்களை ஈடுபடுத்தியது, பிராத்தல், வடக்கு அயர்லாந்தில் பண மோசடியில் ஈடுபட்டது என பல்வேறு குற்றங்களுக்காக கடத்தல் கும்பலை சேர்ந்த அனைவருக்கும் தலா இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் ஏற்கனவே முன்னரும் இரண்டாண்டு சிறை தண்டனையை ஸ்வீடனில் அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகும் அதே குற்றத்தை தொடர்ந்து செய்திருக்கிறார்கள்.

அவர்கள் கைது செய்யப்பட்டபோது மகிழ்ச்சியடைந்தாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் அன்னாவுக்கு திருப்தி ஏற்படவில்லை.

“வாழ்க்கையில் எதுவுமே நியாயமாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை” என்று சொல்கிறார் அன்னா.

சிறுமிகளும், பெண்களும் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதோடு, பண்ணைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுவது அதிகரித்து வருவதை கண்டு கவலையடைந்த அரசியல் தலைவர் லார்ட் மோரோவின் முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வகையில் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து அன்னாவும் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி சாட்சியமளித்தார்.

இது தொடர்பான புதிய சட்டவரைவு வடக்கு அயர்லாந்து சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, மனித கடத்தல் மற்றும் சுரண்டலுக்கு எதிராக 2015ஆம் ஆண்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்ள பணம் கொடுப்பது (buying sex) குற்றம் என்று சட்டம் இயற்றிய ஐக்கிய ராஜ்ஜியத்தை சேர்ந்த முதல் நாடு வடக்கு அயர்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்கு மாறாக, பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதிப்பது (selling sex) குற்றமில்லை என்றும் அந்த சட்டம் கூறுகிறது. இந்த மாற்றத்திற்கு தனது பங்களிப்பும் உதவியாக இருந்ததில் அன்னா மகிழ்ச்சியடைகிறார்.

இந்தச் சட்டத்தின் மூலம் ஆட்களை கடத்துபவர்களும், பாலியல் தொழிலுக்காக பிறரை நாடுபவர்களும் தண்டிக்கப்படுவதால், இந்த குற்றச் சங்கிலி உடைக்கப்படும் என்று நம்புகிறார் அன்னா.

சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டால் கூட போதும், நாளடைவில் மாற்றங்கள் விரிவடையும் என்று கூறுகிறார் அன்னா.

கடத்தலால் பாதிக்கப்பட்ட தன்னைப் போன்றவர்கள் அச்சமில்லாமல் வாழலாம் என்று கூறும் அன்னா, பாலியல் தொழில் செய்ததற்காக தங்களை குற்றவாளிகளாக கருதாமல் ஆதரவு தரவேண்டும் என்றும் அவர் கோருகிறார்.

பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்ள பணம் கொடுப்பது (buying sex) குற்றம் என்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக அன்னா கடத்தி வரப்பட்ட அயர்லாந்து குடியரசும் 2017ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.

ஒன்பது மாதம் பாலியல் அடிமை வாழ்க்கையில் சீரழிந்த அன்னாவின் உடலில் காயங்கள் நிரந்தர வடுக்களாக மாறிவிட்டன.

அன்னாவின் பிறப்புறுப்பு மிகவும் சேதமடைந்துள்ளது. அவரது இடுப்பிலும், மூட்டுக்களிலும் இடைவிடாமல் வலி இருப்பதாக அன்னா சொல்கிறார்.

கொடுமையான பழைய நினைவுகளால் அலைகழிக்கப்படும் அன்னாவுக்கு இரவில் உறக்கம் வருவதில்லை. தூங்கினாலோ பழைய கொடூரமான அனுபவங்கள் கனவுகளாக வந்து நரக வேதனை அளிக்கின்றன.

மது, சிகரெட், வியர்வை, விந்துக்களின் கலவையான துர்நாற்றம் இப்போதும் தன்னைச் சுற்றி இருக்கிறதோ என்று அவ்வப்போது அன்னாவுக்கு தோன்றும். இந்த கொடூரமான தாக்கங்களில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் அன்னா தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

“பல ஆண்டுகளாக பேசாமல் இருந்த தாயுடனான அவரது உறவு தற்போது சுமூகமாகிவிட்டது. உண்மையில் எனக்கு நடந்தது என்ன என்பதை அம்மா புரிந்து கொள்வதற்கு நிறைய காலம் ஆனது. இப்போது ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டோம்” என்று சொல்கிறார் அன்னா.

தனது கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக பிரிட்டனில் ஒரு பல்கலைக்கழக்கத்தில் சேர்ந்த அன்னாவால் படிப்பை தொடர முடியவில்லை. காரணம் பணப் பற்றாக்குறை! கல்விக் கட்டணத்தை செலுத்த போதிய பணம் இல்லை. அதுமட்டுமா? கல்வி நிதியுதவி பெறுவதற்கான எந்தவித தகுதியும் அவருக்கு இல்லை.

தற்போது ஓட்டல் துறையில் பணிபுரிந்துவரும் அன்னா, “எப்படியும் கல்வி கற்கவேண்டும் என்ற கனவு என் மனதில் கனன்றுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் அதற்காக பணம் சம்பாதிக்க வேண்டும். எனவே நான் இப்போது வேலை, உழைப்பு, சேமிப்பு என்று மும்முரமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார்.

Leave a comment