சிறைக்கைதிகள் கூரைக்குமேல் அல்ல, வேறு எங்கு ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தாலும் வழக்கு நடவடிக்கைகள் வழமையான முறையிலேயே இடம்பெறும். அதில் மாற்றம் மேற்கொள்ளமுடியாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார்.
தாமதமாகிக் கொண்டிருக்கும் வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக்குமாறும் தங்குமிட வசதிகள் மற்றும் ஆகார பான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும்கோரி வெலிக்கடை சிறைச்சாலைக் கூரைக்குமேல் ஏறி பெண் சிறைக்கைதிகள் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தனர்.
இதுதொடர்பாக ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலைக் கூரைக்குமேல் ஏறி ஆர்ப்பாட்டம் செய்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளரிடம் கேட்டறிந்து கொண்டேன். அவர்கள் கூரைக்குமேல் அல்ல, வேறு எங்கு ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தாலும் வழக்கு நடவடிக்கைகள் வழமையான முறையிலேயே இடம்பெறும். அதில் மாற்றம் மேற்கொள்ளமுடியாது.
அத்துடன் யாருக்கு வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் சுதந்திரத்தை நாங்கள் நாட்டில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். முன்னர்போல் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது நாங்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளமாட்டோம். கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி சிறைக்குச் சென்றவர்களில் 27 பேர் கொலை செய்யப்பட்டதற்கு கேள்வி தயாரித்ததுபோல் நாங்கள் கேள்வி தயாரிப்பதில்லை. அதனால் நாங்கள் மிகவும் நிதானமாக சிந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம்.
அத்துடன் சிறைச்சாலைகளுக்குள் சட்டவிரோத நடவடிக்கைகள் இன்னும் இடம்பெற்றுவருவதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளை நான் எப்படியாவது கட்டுப்படுத்துவோம் என்றார்.