இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் என்பனவற்றை நடத்துவதற்கு நாளை (31) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை நள்ளிரவு முதல் செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் குறித்த பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு தனி நபரோ அல்லது நிறுவனமோ இந்த தடை உத்தரவை கருத்திற்கொள்ளாது நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

