புதுவை சட்டசபையில் நியமன எம்எல்ஏ-க்களை அனுமதிக்க மறுப்பு: வாசலில் நின்று போராட்டம்

183 0

புதுவை சட்டசபையில் இன்று அனுமதிக்கப்படாததால் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் சபை வாசலிலேயே நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ள அதிகாரம் உள்ளது.இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் மாநில அரசின் சிபாரிசின் பேரில் மத்திய அரசு நியமிப்பது வழக்கம்.

ஆனால் இந்த தடவை மாநில அரசின் சிபாரிசு இல்லாமலேயே மத்திய அரசு பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.அவர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்த நிலையில் கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அவர்களை எம்.எல்.ஏ.க்களாக ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். அதன்பிறகு நடந்த எந்த சட்டமன்ற கூட்டத்திலும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் அவர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்டது.இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் நுழைய வந்தனர். அப்போதும் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. அங்கு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு எதுவும் விதிக்கவில்லை. அதே நேரத்தில் சட்டமன்றத்துக்குள் எம்.எல்.ஏ.க்கள் செல்லலாம் என்றும் கூறவில்லை.

இப்போது புதுவை சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த தடையும் விதிக்காததால் அவர்கள் சட்டசபைக்குள் சென்று பணியாற்றலாம் என்று கவர்னர் கிரண்பேடி கூறியிருந்தார்.அதன்படி இன்று சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்து இருந்தனர். இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது. அதற்கு முன்னதாகவே அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வந்திருந்தனர்.

9.35 மணியளவில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் காரில் சட்டசபைக்கு வந்தனர். அவர்களை சட்டசபை வாசல் வரை போலீசார் அனுமதித்தனர்.

சட்டசபை வளாகம் முழுவதும் சபை காவலர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவர்கள் சட்டசபை வாசலை பூட்டு போட்டு பூட்டி இருந்தனர். 3 எம்.எல்.ஏ.க்களும் அங்கு வந்து பூட்டை திறக்கும் படி கூறினார்கள். அதற்கு சபை காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மட்டுமே உள்ளே அனுப்ப அனுமதி உள்ளது. உங்களை அனுப்ப முடியாது என்று கூறினார்கள்.

3 எம்.எல்.ஏ.க்களும் அந்த உத்தரவை பிறப்பித்தது யார்? எழுத்துபூர்வமாக அது பிறப்பிக்கப்பட்டுள்ளதா? எழுத்துபூர்வ உத்தரவை எங்களுக்கு காட்டுங்கள் என்று கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து சபை காவலர்கள் சபை மார்‌ஷல் ரமேசை அங்கு அழைத்து வந்தனர். அவர் எம்.எல்.ஏ.க்களிடம் பேசினார். எங்களுக்கு சபாநாயகரிடமிருந்து உத்தரவு வந்திருப்பதால் உங்களை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

அந்த உத்தரவை எழுத்து பூர்வமாக கொடுங்கள், இல்லை என்றால் கேட்டின் மீது ஏறி உள்ளே குதித்து விடுவோம் என்று கூறினார்கள். நான் எழுத்துபூர்வ உத்தரவை வாங்கி வருகிறேன் என்று கூறி விட்டு ரமேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். 3 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை வாசலிலேயே நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் 1 மணி நேரம் அவர்கள் காத்திருந்தபோதும் மார்சல் திரும்பிவரவில்லை. அவர் சபாநாயகர் அருகில் நின்று கொண்டார்.இதனால் வேறுவழி தெரியாத 3 எம்.எல்.ஏ.க்களும் 10.35 மணி அளவில் சட்டசபையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.அப்போது 19-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடக்கும்போது சபாநாயகர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று கூறினார்கள்.

நியமன எம்.எல்.ஏ.க்கள் வருகையையொட்டி சட்டசபையில் கூடுதலாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Leave a comment