ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும்- கலெக்டரிடம் லாரி உரிமையாளர்கள், பெண்கள் மனு

171 0

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லெட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கலெக்டரிடம் லாரி உரிமையாளர்கள் மற்றும் பெண்கள் மனு அளித்துள்ளனர். 

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்த சிறு,குறு தொழிலாளர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள், டேங்கர் லாரிகள் தினசரி தாமிரதாது, ராக் பாஸ்பேட், நிலக்கரி, தாது மணல், அமிலங்கள், இதர மூலப்பொருட்களை கையாள பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன்மூலம் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், கண்காணிப்பாளர்கள், அதனுடன் தொடர்புடைய லேத் பட்டறைகள், மெக்கானிக், லாரிக்கு பெயிண்ட் அடிப்போர், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் எங்கள் தொழில் நலிவடைய தொடங்கியுள்ளது. இதனால் தனியார் வங்கிகளில் கடன் தவணை செலுத்த முடியாமல் அவதிப்படுகிறோம். மாத வருமானமின்றி அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்படுகிறோம். வீட்டு வாடகை செலுத்த முடியாமலும், குழந்தைகளின் படிப்பு செலவை சமாளிக்க முடியாமலும் அவதிப்படுகிறோம். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து செயல்பட செய்யவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல தூத்துக்குடி பகுதி கிராமங்களை சேர்ந்த பெண்களும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள்.

Leave a comment