சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு கூடாது – தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

194 0

சித்தா ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் மூலம் கலந்தாய்வு நடத்தக்கூடாது என தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வின் மூலம் கலந்தாய்வு  நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி சி.பி.எஸ்.இ.-க்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கவுன்சிலிங்கை எப்படி நடத்துவது? என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதன்பின்னர், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ  படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தக்கூடாது என்றும், பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

Leave a comment