வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டே ஜனாதிபதி தனக்கு பிரதியமைச்சர் பதவியை வழங்கினேரே தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்ப்பதற்கு அல்ல என விவசாயத்துறை பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
விவசாயத்துறை பிரதியமைச்சராக தனது கடமைகளை உத்தியோகபூர்வாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கிலுள்ள மக்களின் வருமை நிலைமையை உணர்ந்து அப்பிரதேசங்களில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எனக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டதே தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்காக அல்ல.
அத்துடன் நாடளாவிய ரீதியில் விவசாயத்துறையை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன் என்றார்.
இதேவேளை பிரதியமைச்சராக பதவியேற்ற அங்கஜன் இராமநாதனை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ நேரில் சென்று வாழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.