சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம்

221 0

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சமுர்த்தி நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

சமூர்த்தி பயனாளிகளின் பெயர் விபரங்களின் மூலம் புளியங்குளம் சமுர்த்தி வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து  கடன்தொகையை பெற்று நிதி மோசடி செய்தமை தொடர்பாக வவுனியா மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிலர் மீது கடந்த காலங்களில் குற்றம் சாட்டபட்டிருந்தது.

இதன்பிரகாரம் மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தால் இவ் விடயம் தொடர்பாக  குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது. பின்னர் வவுனியா  மாவட்ட சமுர்த்தி இயக்குனரின் வேண்டுகோளிற்கமைய கொழும்பில் உள்ள சமுர்த்தி திணைக்களத்தின் தலைமை பணிமனையின் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த விசாரணை முடிவுகளின் பிரகாரம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஐவர் குறித்த குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யபட்டது.

அதனடிப்படையில் குறித்த ஐவரையும் பதவியில் இருந்து நீக்குமாறு சமுர்த்தி தலைமை அலுவலகத்தில் இருந்து வவுனியா மாவட்ட  செயலகத்திற்கு  கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட இயக்குனர் மற்றும் அரச அதிபர் ஊடாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு குறித்த கடிதம் அனுப்பபட்டு அவர்களுக்கான பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சமுர்த்தி இயக்குனர்  தெரிவித்தார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஐவரும் 2013ம் ஆண்டு சமுர்த்தி திணைக்களத்திற்குள் உள்ளீர்கபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment