மாத்தறை கொள்ளைச் சம்பவம் – மோட்டார் வாகனத்துடன் ஒருவர் கைது

207 0

மாத்தறை நகைக்கடை கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் மற்றும் அதன் உரிமையாளரை களுத்துறை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினர் இன்று (02) அதிகாலை கைது செய்யதுள்ளனர்.

குறித்த CAE 4706 எனும் வெள்ளை நிறமுடைய அல்டோ ரக மோட்டார் வாகனம் தலகல, பாவனா வீதி, மொரகஹஹேன பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மடபாதகே கபில குமார எனும் 43 வயதுடைய நபர் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியான குறித்த சந்தேக நபர், தனது மனைவியின் பெயரில் மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்துள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

அதேவேளை மாத்தறை கொள்ளை சம்பவத்தின் போது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கொஸ்கொட தாரக என்பவருடன் குறித்த நபர் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த நபரின் வீட்டிலேயே இந்தக் கொள்ளைக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a comment