ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த சிறுபான்மை மக்களை அரசு கைவிடாது- ராஜித

440 0

ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளையும், வைத்திய வசதிகளையும் விஸ்தரிக்கும் நோக்கில் கடந்த மூன்று வருடகாலத்தில் 22,000 மில்லியன் ரூபா மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடகிழக்கினை இன்னும் முழுமையாக கட்டியெழுப்ப முடியவில்லை. வடகிழக்கை கட்டியெழுப்புவதில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக உழைக்க வேண்டியுள்ளது. இதற்கு இனம், மதம், மொழி கடந்து அனைவரும் ஒற்றுமையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் தான் வடகிழக்கை கட்டியெழுப்ப முடியும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்தன குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் மக்களின் தேவைகளை படிப்படியாக நிவர்த்தி செய்து வருகின்றோம்.

நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கை கட்டியெழுப்புவதில் கவனமாக இருந்து கொண்டு பயணிக்கின்றது. வடகிழக்கை மட்டும் கட்டியெழுப்பவில்லை. வடகிழக்கில் உள்ள பொதுமக்களின் தேவைகள், வசதி வாய்ப்புக்கள், பொருளாதாரம், வைத்திய தேவைகள், சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை தெளிவாக ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கின்றது. ஆட்சி மாற்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது. கடந்த மூன்று வருடகாலத்தில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளையும், வைத்திய வசதிகளையும் விஸ்தரிக்கும் நோக்கில் 22,000 மில்லியன் ரூபா மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாரிய நிதிகளை ஒதுக்கி வடகிழக்கை கட்டியெழுப்புகின்றோம்.

வடகிழக்கை அபிவிருத்தி செய்வதன் மூலம் தான் இப்பிரதேசத்தை சேர்ந்த படித்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும். கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தேவைகளையும், குறைபாடுகளையும், மக்களின் பிரச்சினைகளையும் உடனுக்குடன் எனுக்கு அறியத்தாருங்கள். அதனை நான் தங்குதடை இன்றி நிறைவேற்றித் தருவேன். வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை மிக விரைவில் தீர்த்து வைப்பேன். தொடர்ச்சியாக சிறுபான்மையினர் நல்லாட்சிக்கு ஒத்துழையுங்கள். எங்களோடு இணைந்து நல்லாட்சியை தக்கவைத்துக் கொள்ளுங்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment