தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம்

483 0

தமது பூகோள அரசியல் நலன் கருதி சில வல்லரசுகள் தமிழீழ விடுதலையை தாமதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. எமது விடுதலைப்போராட்டத்தின் தர்மத்தை நன்கு உணர்ந்த வல்லரசுகள் இன்று தமிழரை வைத்தே தமிழரின் விடுதலையை தாமதப்படுத்த முயற்சிக்கின்றன.

தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள் நடாத்திய அறவழிப்போராட்டங்கள் எமது தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தருவதற்கான கதவுகளைத் திறந்துள்ளன. தமிழீழ மக்களின் விடுதலைக்கான முதல் கதவு திறக்கப்பட்ட நேரத்தில் எமது விடுதலைக்கு நாம் கொடுத்த உயிர்த் தியாகங்களை சில சுயநல வாதிகள் தமது நலனுக்காக பேரம் பேசுவதை நாம் அனுமதிக்க முடியாது.

ஆகவே புலம் பெயர் தமிழீழ உறவுகளாகிய நாம் எமது வரலாற்று பணியை தொடர்ந்தும், எம் தமிழீழ மக்களையும் தேசத்தையும் காப்பாற்ற அறவழி போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறான போராட்டங்களினூடாகவே எமக்கு சிங்கள பேரினவாத அரசுகளினால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கேட்கவும் அதன் மூலம் எமது மக்களையும் மண்ணையும் பாதுகாக்கவும் முடியும்.

மனித உரிமைகள் ஆலோசனை அவையின் 33 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள காலத்தில், 14.09.2016 அன்று, பிற்பகல் 14.30மணிக்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக (Rond-Point Robert SCHUMAN, 1000 Brussels ), தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசுகளால் நடாத்தப்பட்ட தமிழினப்படுகொலைகளுக்கும் தற்போது திட்டமிட்டபடி தொடருகின்ற தமிழனவழிப்புக்கும் அனைத்துலக சுயாதீன விசாரணையே நீதியைப்பெற்றுத்தரும் என வலியுறுத்தி மனித நேய ஈருருளிப் பயணம் தொடங்கவுள்ளது.

சர்வதேசத்திடம் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், தமிழீழ மக்கள் தமது விருப்பை வெளிப்படுத்த இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாக்கெடுப்பினை நடாத்தவும் அவ்வாக்கெடுப்பில் புலம்யெர் தமிழீழ மக்கள் கலந்து கொள்ள ஐக்கிய நாடுகள் அவை ஆவண செய்யவும், தமிழீழ நிலப்பரப்பில் இயல்பு வாழ்க்கை உருவாக்கப்பட்டு தமிழீழ மக்களின் பேச்சு நடமாட்ட சுதந்திரகளை உறுதிப்படுத்தவும் போன்ற முக்கிய கோரிக்கைகளுடன் சிங்கள பேரினவாதத்தின் எல்லை கடந்த தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரியும் மனித நேய ஈருருளிப்பயணம் நடைபெறவுள்ளது.
தமிழீழ மக்களுக்கு நீதிகிடைக்க இவ் அறவழிப்போராட்டத்தில் பங்கெடுக்க இருக்கும் மனித நேயச் செயற்பாட்டாளர்களை எம்முடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழ மக்களுக்கு நீதிவேண்டியும் தமிழீழத்தை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்கக் கோரியும் வேண்டி 26.09.2016 திங்கட்கிழைமை ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிலும் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக்கடமையைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.