நாட்டில் அரசியல் ஸ்திரமாக இல்லை என்றும் அரசில் சூழ்ச்சியே காணப்படுகின்றது என்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற (03) பிக்குமார்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், நிகழ்வின் நிறைவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் அரசியல் ஸ்திரமாக இல்லை, தேர்தலில் வெற்றி பெறமுடியாத சில தலைவர்கள் அரசாங்கத்தை ஸ்திரமற்ற தன்மைக்கு மாற்ற பல சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பல வழிகளில் முயற்ச்சி செய்கின்றனர்.
ஆனால் கடந்த காலத்தில் அரசியலில் பல விடயங்கள் இடம்பெற்றன. அவற்றை அதிகார ஆசைக் கொண்டவர்களே செய்தார்கள். மக்களால் தேர்தலில் வெற்றிபெற முடியாத, பணத்தைக் கொண்டு வெல்ல முடியும் என்று நினைக்கும் சில நபர்களே இந்த அரசாங்கத்தை கவிழ்க்க பல முயற்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.
சில ரேஸ் புகி, ஊழல் வாதிகள் ஒன்றிணைந்து நடத்திய அழிவில் நாட்டின் பொருளாதார முதலீடு பாதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு தெரிவாகி பதவிகளை பெற்று நாட்டை சீரழித்துள்ளனர் சில அரசியல் வாதிகள். நாட்டை பற்றி எண்ணும் அரசியல் தலைவர்கள் இதுபோன்ற வேலைகளை செய்யமாட்டார்கள் என்றார் அமைச்சர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
´ஜனாதிபதியும் பிரதமரும் கலந்தாலோசித்தே அமைச்சரவை மாற்றத்ததை செய்துள்ளனர். இருக்கின்ற 18 மாதங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஒரு முக்கியமான காலப்பகுதியாகும். ஆகவே நாம் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை சரிசெய்து முன்னோக்கிச் செல்வதையே எதிர்பார்க்கின்றோம்.
எமது அரசாங்கத்தின் குறைபாடானது நாங்கள் செய்யும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை சரியான முறையில் மக்களுக்கு பிரசாரம் செய்யவில்லை என்பதாகும். கடந்த அரசாங்கம் செய்த பிரசாரத்தை விட எமது அரசாங்கத்தில் பெரிதாக பிரச்சாரம்அமையவில்லை.
எனது எதிர்பார்ப்பு இந்த 18 மாதங்களுக்குள் மக்களுக்கு நல்ல வேலைத்திட்டங்களை செய்வது மற்றும் அபிவிருத்தியை கிராமத்துக்கு கொண்டு செல்வதேயாகும். மக்கள் 2015ஆம் ஆண்டு தேர்தல் ஆணை கொடுத்தார்கள். ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து இந்த அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று.
அப்படி இல்லை என்றால் பொதுமக்கள் இலங்கை சுதந்திர கட்சிக்கு அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கு தனியாக ஆட்சியை அமைக்க தேர்தல் ஆணை கொடுத்திருப்பார்கள். ஆனால் அதிகாரத்தை இரண்டு பிரதான கட்சிகளுக்கு வழங்கிமையானது அரசியலை ஒருபக்கத்தில் வைத்துவிட்டு நாட்டை கட்டியெழுப்பவேயாகும்.
அதையே நாம் கடந்த காலத்தில் செய்தோம். எதிர்காலத்திலும் முன்னெடுப்போம். தூய்மையான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதையே புதிய அமைச்சரவை மாற்றம் எமக்கு எடுத்துக் காட்டுகின்றது என்று கூறினார்.

