அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவித்தது கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம்

202 0

ஃபேஸ்புக் தகவல் திருட்டு விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவில் புகழ் பெற்ற சமூக வலைத்தளமாக இருந்து, தகவல் திருட்டு சம்பவத்தில் பெரும் பிரச்சனைகளை ஃபேஸ்புக் சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளம், தனது பயனரின் தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்ட விவகாரம் பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு தகவல் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற அரசியல் ஆலோசனை தளத்துடனும் இணைந்து செயல்பட்டது. அந்த நிறுவனம் அரசியல் தலைவர்களுக்கு சில ரகசிய பணிகளை செய்து கொடுத்து வந்தது.
அது ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்களை திருடி தனது வாடிக்கையாளர்களுக்கு விவரங்களை கொடுத்தது தெரியவந்தது. முதலில் 5 கோடி பேர் தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்துடன் உள்ள உறவை ஃபேஸ்புக் முறித்து கொண்டது.
இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் சுமார் 8 கோடியே 70 லட்சம் பேருடைய தகவல்களை திருடி இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் தெரிவித்தார்.
இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனால்டிகா தனது செயல்பாட்டை நிறுத்துகொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

Leave a comment