தமிழ் மக்களின் போராட்டத்திற்கு விக்கரமபாகுவின் ஆதரவு

195 0

சுயாட்சி அதிகாரமுடைய தமிழர் தாயகத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

பெடரல் கட்சி என்று அழைக்கப்படும் தமிழரசுக் கட்சியின் ஸ்தாகத்தலைவரான தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இந்தக் கருத்தை தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் மக்களின் உரிமைக்காக கடந்த நான்கு தசாப்தகாலமாக குரல்கொடுத்துவரும் இடதுசாரி தலைவர்களில் முக்கியஸ்தரான நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன எஸ்.ஜே.வி.செல்வநாயகம் என்ற தந்தை செல்வாவின் நினைவுப்பேருரையை ஆற்றியதுடன் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தந்தை செல்வா முன்னெடுத்த போராட்டங்கள் பொருந்தும் என்றும் கூறினார்.

ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் உரிமைகளுக்காக போராடுவது. இந்த போராட்ட முறையைதான் தந்தை செல்வா குறிப்பிட்டிருந்தார்.

சிங்களத்தில் ஸ்ரீ அடையாளத்தை பொறித்த போது தமிழில் ஸ்ரீ அடையாளத்தை பொறித்துக்கொண்டு அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு வாகனத்தில் சென்றார்.

இதுதான் எங்களது ஸ்ரீ என்று அவர் அடையாளப்படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை ஆத்திரமூட்டும் செயல் என்று சிலர் குற்றம்சாட்டலாம்.

ஸ்ரீ சிங்களத்திலும் ஸ்ரீ தமிழிலும் ஸ்ரீ தான். இதற்காக ஆத்திமடைய வேண்டும்.

எதற்காக சிங்களத்தில் மாத்திரம் ஸ்ரீ வேண்டும் என்று கேட்டார்கள். சிங்கள ஆதிக்கத்தை பலவந்தமாக மற்றுமொரு இனத்தின் மீது திணிப்பதற்காகவே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதனால் தந்தை செல்வா ஆரம்பித்த போராட்ட வடிவங்கள் இன்றைக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசமொன்றை கட்டியெழுப்புவதற்காக தமிழர் தாயகத்தில் தொடர்ந்து போராட வேண்டியுள்ளதாகவும் வலியுறுத்திய நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையும் வலியுறுத்தியதுடன், அதற்கு முழுமையான ஆதரவையும் பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சனை இன்னமும் முடிவடையவில்லை. தமிழர் தேசத்திற்கான போராட்டம் தொடர்ந்தும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. அரசியல் யாப்பின் ஊடாக சுயாட்சி அதிகாரமுடைய தமிழர் தேசத்தை அடைவதற்கான போராட்டத்தை உறுதியாக முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும்.

அதற்காக நாம் தற்போதைய அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றி மிகவும் மோசமான சிங்கள பௌத்த பேரினவாத அரசொன்றை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த முயற்சியை முற்போக்குவாதிகள் அனைவரும் இணைந்து தோற்கடித்தோம். அதன்போது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை மறந்து ஒற்றுமையாக செயற்பட்டிருந்தனர்.

அதனால் எதிர்வரும் நாட்களிலும் நாம் முரண்பாடுகளை களைந்த தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இணைந்து போராட வேண்டும். அதற்கு நவ சம சமாஜக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும்.

Leave a comment