வேறு மாநில சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்- சி.பி.ஐ. இயக்குனருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

357 0

குட்கா வழக்கு குறித்து விசாரிக்க வேறு மாநில சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என சி.பி.ஐ. இயக்குனருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் இந்திய உள்துறை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சி.பி.ஐ. அமைப்புக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

வழக்கின் முக்கியத்துவத்தை கருதியும், தமிழ்நாட்டின் முக்கியமான இந்த வழக்கு விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும், விரைவாகவும் நடைபெறும் பொருட்டும் நேர்மையான, அனுபவமிக்க, வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைத்து, தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் விற்பனை ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் நேர்மையற்ற அதிகாரிகள் என ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ள இரண்டையும் அப்புறப்படுத்தி, நீதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் நன்கு அறிந்து வைத்திருக்கும் ‘குட்கா’ விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன்.

மாதந்தோறும் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குட்கா முதலாளிகளின் டைரியிலேயே இடம் பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன் ஆகிய இருவரையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி நீக்கம் செய்து, முழுமையான, உண்மையான, விரைவான விசாரணை நடைபெற தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment