போர்குற்ற விசாரணைகளுக்கு ஜே.வி.பி எதிர்ப்பு

338 0

யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றது. தொழிலாளர் தினமான மே தினத்தை இம்முறை மே மாதம் ஏழாம் திகதிக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மாற்றியுள்ளது.

இந்தநிலையில் மே தினத்தை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையிலேயே ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துந்நெத்தி இந்த எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றார்.

அமெரிக்கா ஸ்ரீலங்காவிற்கு தொடர்ச்சியாக ஜி.எஸ்.பி வரிச் சலுகைளை வழங்குவதற்கும் நிதி உதவிகள் மற்றும் நன்கொடைகளை வழங்குவதற்கும் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் ஜெனீவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமெரிக்காவிடமிருந்து நிதி உதவிகளை பெறக் கூடாது என்று தெரிவித்துள்ள ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துந்நெத்தி இவ்வாறான நிபந்தனைகளுக்கு அடிபணிந்தால் நாட்டை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு தாரை வார்த்துக்கொடுத்ததாக அமைந்துவிடும் என்று தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை நாட்டிற்கு நன்மை பயப்பதாக அமைந்திருந்தாலும் அமெரிக்காவின் இராணுவ, யுத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்த நன்மைகளை பெற முற்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அமெரிக்கா நிதி உதவிகளை வழங்கும் போது இவ்வாறான நிபந்தனைகளை விதித்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ள சுனில் ஹந்துந்நெத்தி,

எனினும் இம்முறை வடக்கு கிழக்கிலுள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறும், போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நீதிமன்ற பொறிமுறையை ஏற்படுத்துமாறும் நிபந்தனை விதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் குற்றங்கள் மற்றும் போர் குற்ற விசாரணைக்கான நீதிமன்ற பொறிமுறை ஆகிய அரசியல் ரீதியாக நாட்டின் இறையாண்மைக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் நிபந்தனைகளையே அமெரிக்கா திணித்திருப்பதாகவும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருக்கின்றார்.

இதனால் இந்த நிபந்தனைகளை முழுமையாக நிராகரிக்குமாறு தாம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதுடன் அமெரிக்காவின் அரசியல் ரீதியான தலையீடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a comment