வடக்கு மாகாணத்துக்கு தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிக்கக்கூடாது என்று முக்கிய சில மகாநாயக்க தேரர்கள் கடுமையாக வலியுறுத்தியுள்ளனர். அதனால் தான், வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் நியமிக்கப்படவில்லை. ரெஜினோல்ட் குரே மீண்டும் வடக்குக்கு ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார் என்று அறியமுடிகின்றது.
வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர். ஏற்கனவே ஆளுநர்களாக இருந்தவர்களுக்கே இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டன.
இதற்கமைய, வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ரெஜினோல்ட் குரேவை மத்திய மாகாணத்துக்கு மாற்றிவிட்டு மேல் மாகாண ஆளுநராக இருந்த கே.சி.லோகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதே ஜனாதிபதியின் முன்னைய திட்டமாக இருந்தது.
எனினும், வடக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருக்கும் நிலையில், அந்தப் பகுதிக்கு தமிழ் ஆளுநர் ஒருவரை நியமித்தால் அது ஏதேனும் ஒரு விதத்தில் பாதகமாக அமைந்துவிடும் என்றும், அதனால் சிங்களவரொருவரை ஆளுநராக நியமிக்குமாறும் மகாநாயக்க தேரர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாகவே ஜனாதிபதி தனது முடிவை இறுதிநேரத்தில் மாற்றி, லோகேஸ்வரனை வடமேல் மாகாண ஆளுநராக நியமித்தார். வடக்குக்கு வேறொருவரை நியமித்தால் நெருக்கடி வரும் என்பதால் ரெஜினோல்ட் குரேவுக்கு ஆளுநர் பதவி மீண்டும் வழங்கப்பட்டது எனவும் அறியமுடிகின்றது. ஆளுநர் குரே வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் கடமைகளையேற்றுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் தான் நியமிக்கப்படவேண்டும் என்று, வடக்கு அரசியல் தலைவர்கள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.