சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி சர்வதேச மே தினக் கூட்டங்களை நடத்துவதற்கு 19 தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் செயற்பாட்டாளர் சில்வெஸ்டர் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மே முதலாம் திகதி மு.ப. 11 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மே தினக் கூட்டங்கள் இடம்பெறும். அரசாங்கம் மே தினக் கூட்டங்களை மே மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளதை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது.
மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினக் கூட்டங்களை நடத்துவதற்கு மைதானத்தைக் கோரி கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கு கடிதமொன்றினை அனுப்பியிருந்தோம். எனினும் மாநகர சபை ஆணையாளர் மே முதலாம் திகதி மைதானத்தை தர முடியாது என தெரிவித்துள்ளார். அதற்கான காரணமாக மாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச ரீதியில் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அத்தினத்தில் மைதானத்தை வழங்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் மாநாயக்க தேரர்களின் தேவைக்கேற்ப மே தினத்தை ஒத்திவைப்பதாக இருந்தால் நாட்டில் அரசாங்கம் எதற்கு? இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு திட்டமிட்டபடி மே மாதம் முதலாம் திகதி மே தினத்தை அனுஷ்டிப்போம் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.