படையினர் நிலைகொண்டுள்ள துயிலுமில்லத்தை மீட்பதற்காக மீட்க குழு!

338 0

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ள துயிலுமில்ல காணியினை மீட்பதற்காக பிரதேச மக்கள் செயற்பாட்டுக்குழு ஒன்றினை அமைத்துள்ளார்கள்.

அளம்பில் பகுதியில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தங்கள் பிள்ளைகளின் உடலங்கள் புதைக்கப்பட்ட காணியில் படையினர் நிலைகொண்டுள்ளார்கள் என்றும் இதனை படையினருக்கு வழங்கவேண்டாம் என்றும் கடந்த மார்ச்மாதம் 26 ஆம் திகதி பிரதேச மக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒன்றினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளார்கள்.

இன்னிலையில் குறித்த காணியினை மீட்பதற்காக பிரதேச மக்கள் செயற்பாட்டுக்குழு ஒன்றினை அமைத்து அதன் ஊடாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த காணியில் படையினர் நிலைகொண்டுள்ளதுடன் காணி தனிநபருக்குரிய காணி என்றும் அந்த காணியினை படையினருக்கு விற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்னிலையில் இந்தகாணியினை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரின் உதவிகொண்டும் மீட்டு குறித்த பகுதியில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்த எங்கள் பிள்ளைகளை நினைவிற்கொள்ள வழிசமைக்கவேண்டும் என்றும் செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இந்த காணியினை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவம் இதற்கு அனைத்து தமிழ்மக்களும் உதவி செய்யவேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்.

Leave a comment