ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் தோல்வியுற்றாலும் பாராளுமன்றம் கலையாது என்றும் அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுள்ள கட்சித் தலைவரையே அரசாங்கத்தை அமைக்கும்படி அழைப்பு விடுப்பார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் தோல்வியுற்றால் அடுத்து என்ன நடைபெறுமென்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கும் போது, அரசியலமைப்பின்படி அரசாங்கம் பதவிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகும் வரை ஜனாதிபதியால் கூட அரசாங்கத்தைக் கலைக்க முடியாதென்றும் தெரிவித்தார்.
அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

