நாடு முழுவதும் 4 மணி நேர திடீர் சுற்றிவளைப்பு, 2879 பேர் கைது

362 0

poliநாடு தழுவிய ரீதியில் பொலிஸாரால் இன்று (24) அதிகாலை 4.00 மணி முதல் நான்கு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 2879 சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதுதவிர,  7516 வழக்குகள் போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 04.00 மணி முதல் காலை 08.00 மணி வரை இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 266 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1031 பேரும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வேறு பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 800 பேரும், ஹெரோய்ன் ரக போதைப் பொருள் வைத்திருந்த 667 பேரும் உள்ளடங்குகின்றனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment