சங்கானையில் குருக்கள் கொலையில் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்குத் தூக்கு!

492 0

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்த இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரகளுக்கு தூக்குத் தண்டனை வழங்குமாறு அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், தனது தொகுப்புரையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிடம் கோரினார்.

இந்த வழக்கின் தீர்ப்பு நாளைமறுதினம் வியாழக்கிழமை (22) வழங்கப்படும் என திகதியிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், அன்றுவரை எதிரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையிடப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள் கொல்லப்பட்டார். அவரது மகன்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

சம்பவம் தெமாடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி, பாலசுப்பிரமணிம் சிவரூபன் மற்றும் இராணுவச் சிப்பாய் பேதுறு குணசேனவும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளின் பின்னர் வழக்கேடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாராப்படுத்தப்பட்டன.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கியைப் பயன்படுத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் மூவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தூக்குத் தண்டனை விதிக்கவேண்டும்

இந்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது. வழக்குத்தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் இன்று இடம்பெற்றன. வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் தொகுப்புரை வழங்கினார். அரச தரப்புச் சாட்சியங்கள் மற்றும் எதிரிகளிடம் முன்னெடுத்த குறுக்கு விசாரணைகளின் அடிப்படையில் அரச சட்டவாதி தனது தொகுப்புரையை முன்வைத்தார். 3 எதிரிகள் மீதான நான்கு குற்றச்சாட்டுக்களும் தம்மால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்த அரச
சட்டவாதி, எதிரிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் மன்றிடம் கோரினார்.

முதலிரண்டு எதிரிகள் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும் மூன்றாவது எதிரியான இராணுவச் சிப்பாய் சார்பில் மன்றினால் நியமிக்கப்பட்ட ஜோய் மகிழ் மகாதேவாவும் முன்னிலையாகி தமது தொகுப்புரைகளை முன்வைத்தனர்.

Leave a comment