10 வருடங்களாக எனது மகனை தேடி அலைகின்றேன் என்று 2008 ஆம் ஆண்டில் காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் தந்தையார் ஜெனிவாவில் தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மாணவன் காணாமல் போன நிலையில் அவரது தந்தையான தர்மகுலசிங்கம் தற்போது நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளார்.
அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி தனியார் நிறுவனம் சார்பாக பயிற்ச்சிகளை பெற்றுக்கொள்ள சென்றிருந்ததன பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இப்போது பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன இந்த காலத்தில் கொழும்பில் வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் தலைமை அலுவலகத்திலும், குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் முறைப்பாடுகள் செய்துள்ளேன்.
அதேபோல் அமைச்சர்கள், தமிழ் அமைச்சர்கள் உட்பட பலரிடமும் இறுதியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி என அனைவரிடமும் முறைப்பாடு செய்துள்ளேன் காணாமல் போனோர் குறித்து கண்டறிய அமைக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவிலும் நான் சாட்சியம் வழங்கியுள்ளேன்.
எனது மகன் காணாமல் போனமை குறித்து ஆதாரபூர்வமான தகவல்களை நான் சேகரித்து கொண்டுள்ளேன். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இயங்காத பொம்மையாக செயற்பட்டு வருகின்றது.
பொலிசும் தகவல்களை பதிவு செய்துகொண்டுள்ளதே தவிர உண்மைகளை கூறவோ கண்டறியவோ முடியாத நிலைமை காணப்படுகின்றமையே தவிர இதுவரை எந்த முன்னேற்றங்களும் இல்லை.பூசா முகாமில் எனது மகன் உள்ளார் என்று ஒரு தகவல் கிடைத்ததை அடுத்து எனது மனைவி அங்கு சென்றிருந்தார். எனது மகன் குறித்து முழுமையான தகவல்களை கொடுத்து அவரை அடையாளப்படுத்திய பின்னர் பார்வையிட அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதே வழக்கத்தில் எனது மகன் இருக்கின்றார் என கூறி அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் யாருடைய தலையீடு என தெரியவில்லை எங்களை தடுத்துவிட்டனர். பின்னர் அவர் பிரத்தியேகமாக ஒரு சிறையில் இருப்பதாகவும் அங்கு எவருக்குமே பார்வையிட அனுமதி இல்லை எனவும் நாம் அறிந்துகொண்டோம்.
மீண்டும் நாங்கள் சில முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அங்கு உள்ள சில பொலிஸ் உறுப்பினர்களுக்கு எனது மகன் தொடர்பான தகவல்கள் தெரியும் என எங்களால் உறுதியாக கூற முடியும். எனது மகனின் தொலைபேசியை பாவித்தது சரத் சந்திர என்ற ஒரு பொலிஸ் அதிகாரி என்பது நீதிமன்றத்தில் உறுதியாக்கப்பட்டுள்ளது. எனக்கு மேலும் தகவல்கள் கிடைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.