கிறிஸ்தவ ஆலயங்களில் தாக்குதல்: சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும்- தினகரன்

222 0

கிறிஸ்தவ ஆலயங்களில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம், ஆனையூர், கூடல்நகர், சிக்கந்தர்சாவடி உள்ளிட்ட 3 இடங்களில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த நபர்கள் கும்பலாக புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த பெண்கள் சிலரையும் தாக்கினர்.

இது குறித்து கிறிஸ்தவ போதகர்கள் கூடல்நகர், அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். வீடியோ ஆதாரங்களையும் கொடுத்த நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று கூடல்நகர், சிக்கந்தர்சாவடி பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணியினரால் தாக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தை பார்வையிட்டார்.

அங்கு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கிறிஸ்தவ ஆலயத்தை தாக்கிய சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது. பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள்.

இதனை அனுமதிக்கக் கூடாது. இது போன்ற செயல்களை இந்துக்களே ஏற்க மாட்டார்கள். எனவே இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காத வகையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

கிறிஸ்தவ மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment