ஸ்டீராய்டு மருந்தினால் ஜெ. உடல்நிலை பாதிக்கவில்லை – விசாரணை ஆணையத்தில் டாக்டர் சிவகுமார்

1810 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமியிடம், ஸ்டீராய்டு மருந்தினால் அவரது உடல்நிலை பாதிப்படையவில்லை என டாக்டர் சிவகுமார் வாக்குமூலம் அளித்தார். 

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்தே நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் பணியாற்றியவர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட பலதரப்பினரிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் குடும்ப டாக்டரான டாக்டர் சிவக்குமாரிடமும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
சசிகலாவின் உறவினரான இவர் தான் போயஸ் கார்டனில் அவ்வப்போது ஜெயலலிதாவின் உடல் நிலையை பரிசோதித்து வந்தார். அந்த வகையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதனை ஏற்று நீதிபதி ஆறுமுகசாமி முன்பு டாக்டர் சிவக்குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2-வது முறையாக டாக்டர் சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு இன்று டாக்டர் சிவக்குமார் மீண்டும் ஆஜரானார். சேப்பாக்கத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜரான அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.
விசாரணையின் போது, வீட்டில் ஜெயலலிதா திடீரென மயங்கி விழுந்தார். லேசான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போலோ மருத்துவமனை கொண்டு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்னரே அவருக்கு லேசான காயச்சல் இருந்தது. ஜெ.வை மருத்துவமனை கொண்டு சென்றபோது நானும் உடனிருந்தேன். ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டதால் ஜெயலலிதாவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்தார்.

Leave a comment