பெரியார் சிலை விவகாரம்: எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனு

379 0

பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பெரியபாபு சமுத்திரம், வனந்தபாளையத்தை சேர்ந்தவர் ஜெ.ஜெயரட்சகன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திராவிடர் விடுதலைக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்க வேண்டும். ஆணும், பெண்ணும் சுய மரியாதையுடன் வாழவேண்டும் என்று பெரியார் அரும் பாடுப்பட்டார். சமூக நீதிக்கும், பிராமணர் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும், பெண் சுதந்திரம், பகுத்தறிவு உள்ளிட்டவைகளுக்காக போராடினார்.

அதனால் அவரை புதிய யுகத்தின் தீர்க்கத்தரிசி என்றும், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்றும் சமூக சீர்த்திருத்த இயக்கங்களுக்கு தந்தை என்றும் யுனெஸ்கோ புகழ்ந்துள்ளது. அப்படிப்பட்ட மனிதரை, பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா என்பவர் இகழ்ந்து பேசியுள்ளார்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, அக்கட்சியின் தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜா, தொடர்ந்து பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் இழிவுப்படுத்தி பேசி வருகிறார்.

கடந்த 6ந்தேதி தன் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ரஷ்யாவை சேர்ந்த லெனின் சிலை, திரிபுரா மாநிலத்தில் அப்புறபடுத்தப்பட்டதாகவும், அடுத்ததாக தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்றும் கூறியுள்ளார். இவரது கருத்தினால், அமைதியாக இருந்த தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேவையில்லாத பதட்டமும் உருவாகியுள்ளது.

எனவே, பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்திய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கடந்த 6ந்தேதி புகார் செய்தேன். புகாரை பெற்றுக் கொண்டு ரசீது (சி.எஸ்.ஆர்) கொடுத்த இன்ஸ்பெக்டர் இதுவரை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 20ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்குள் பதில் அளிக்கும்படி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

Leave a comment