தொடர்ச்சியாக 06 நாட்களாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் கல்வி சாரா ஊழியர்கள் இன்று 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் வை. முபாறக் தெரிவித்தார்.
அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களும் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்ழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை முதல் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மொழித்தேர்ச்சி கொடுப்பனவு, காப்புறுதி சேவைகள், சொத்துக்களுக்கான கடன் எல்லையை அகற்றுதல், உரிய ஓய்வூதிய முறையை உருவாக்குதல், பதவி உயர்வுகளுக்கான வரையறைகளை நீக்குதல், சம்பள உயர்வுகளில் காணப்படும் வேறுபாடுகளை நீக்குதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் என்பவற்றிற்கு தீர்வுகள் வழங்கப்படவேண்டும். இக் கோரிக்கைகளுக்கு இதுவரையில் சரியான தீர்வு வழங்கப்படவில்லை எனவும் இக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரியுமே இப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக உயர் கல்வி அமைச்சோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ எவ்வித தீர்வும் வழங்கவில்லையெனவும் இதனையடுத்தே அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக செயலாளர் வை. முபாறக் மேலும் கூறினார்.
கல்வி சாரா ஊழியர்களின் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழகங் களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள தோடு சில பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ள தாக பல்கலைக்கழக நிருவாகத்தினர் தெரிவித்த னர்.