சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான கூட்டு அரசு அடுத்த வெசாக் போயா தினத்துக்குள் முற்றுப்பெறும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மஹரகமவில் உள்ள விகாரையில் காலஞ்சென்ற பெல்லன்வில விமலரத்ன தேரரின் நினைவுதான நிகழ்வு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட பின்னர், சமகால அரசியல் நிலமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த அரசின் ஆயுள் இன்னும் இரண்டு ஆண்டுகள் இல்லை. அடுத்த ஆண்டுடன் நல்லாட்சியின் ஆயுள் நிறைவடைகிறது. 500 நாள்களாகின்றன. இன்னும் இருப்பது சொற்ப நாட்களேயாகும். இன்னும் ஒரு வெசாக் போயா தினமே இருக்கிறது. நாங்கள் பல சேவைகளைச் செய்திருக்கின்றோம்.
நாட்டைக் கட்டியெழுப்பியிருக்கின்றோம். போரை முடிவுறுத்தியதன் விளைவாகவே விகாரைகளுக்குப் பக்தர்கள் வர முடிகிறது.
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சுதந்திரமாக செயற்படவும், எமக்கு விரோதமாகவேனும் சரி வாக்களிப்பதற்கும் பலம் கிடைத்திருப்பது விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடித்தமையிலாகும். அப்படியான போரை முடிவுறுத்தி அனைத்துத் துறைகளையும் அபிவிருத்தி செய்தது எமது அரசாகும்.
நல்லாட்சி அரசின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் அளித்த ஆணையை மதித்து, புரிந்து கொள்வதை விடவும் 113 உறுப்பினர்களை ஏற்படுத்தி அரசை அமைப்பது குறித்து அரசு சிந்திக்கக்கூடாது.
அதுவே மகாநாயக்க தேரர்களதும் கருத்தாகும். கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையும், லிபரல் இனவாதத்தை நோக்கிச்செல்லும் அரசு குறித்து அண்மையில் விளங் கப்படுத்தினார். இவற்றுக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு குறித்து அரசு சிந்திக்க வேண்டும். மாறாக 113 உறுப்பினர்களை ஏற்படுத்தி அரசை அமைப்பது முக்கியமல்ல
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நாராஹேன்பிட்ட, அபயராம விசாரையில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களிடம் பேசினார். இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது மேலும் ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட அவர்,
இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சி கூறுவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போது,
ஐக்கிய தேசிய கட்சி மற்றும்ஸ் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டு தரப்பினரும் இதனையே கூறுகின்றனர். எனினும் இறுதி முடிவு இருப்பது ஜனாதிபதியின் கையில். அடுத்த முடிவு இருப்பது எமது கையில். முதலில் ஜனாதிபதி முடிவெடுக்கட்டும். அடுத்து நாங்கள் எடுப்போம் என்றார்.
அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுமானால் அமைச்சரவையை கண்டிப்பாக 30 பேர் வரை வரையறுக்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.