கந்தபளை தேயிலை தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு!

249 0

கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை மலை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் போர் மலை பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் இன்று கந்தபளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கந்தபளை நோனா தோட்டத்தைச் சேர்ந்த 70 வயதான நடராஜ் கணேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாடுகளை தரகர் முறையில் விற்பனை செய்து வந்துள்ள இவர்  நீண்ட காலமாக தொழிலை விடுத்து வாழ்க்கைக்கு வருமானம் இல்லாத நிலையில் தனது மகனின் அரைவணைப்பில் வாழ்ந்த இவருக்கு உணவு மற்றும் இதர சலுகைகள் கிடைக்காத காரணத்தினால் மனவிரக்கத்தி அடைந்துள்ளார்.

இந் நிலையில் நேற்று  மாலை வீட்டை விட்டு வெளியேறிய குறித்த நபர் இன்று காலை போர் மலை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தூக்கிட்ட நிலையில் இருந்ததை அப்பகுதிக்கு வழமையாக தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் சிலர் கண்டுள்ளனர்.

தொழிலாளர்கள் கந்தபளை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் இன்று பிற்பகல் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு  பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை செய்து வருவதாகவும் கந்தபளை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment