கல்யாணம் எப்போது? என்று கேட்டதற்காக கர்ப்பிணியை கொன்ற வாலிபர்

204 0

கல்யாணம் எப்போது என்று அடிக்கடி விசாரித்த கர்ப்பிணி பெண்ணை வாலிபர் ஒருவர் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.

பொதுவாக திருமணமாகாத நபர்களை உறவினர்களோ, நண்பர்களோ சந்திக்கும்போது, எப்போது கல்யாணம்? என்று கேட்பதுண்டு. இப்படி கேட்பது, அவர்கள் மீதுள்ள அக்கறை மற்றும் அன்பின் வெளிப்பாடு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், சில நேரங்களில் அதுவே, வெறுப்பையும் ஆத்திரத்தையும்  ஏற்படுத்திவிடுகிறது. அந்த ஆத்திரத்தின் விளைவாக ஒரு வாலிபர் கர்ப்பிணி பெண்ணையே கொலை செய்திருக்கிறார்.

இந்தோனேசியாவின்  கம்பங் பாசிர் ஜோங் பகுதியில் வசித்து வருபவர் பாயிஸ் நூர்தின் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரிடம் பக்கத்து வீட்டில் வசித்த திருமணமான பெண் ஆயிஷா (32), அடிக்கடி பேசுவார். அப்போது ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்யவில்லை? எப்போது கல்யாணம்? உன் வயது பையன்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிவிட்டது. நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொள்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.

இப்படி பலமுறை கூறி வெறுப்பேற்றியதால் பாயிசுக்கு அவமானமாகப் போய்விட்டது. இது அந்த பெண் மீது ஆத்திரத்தை ஏற்படுத்த, கடந்த மாதம் 19-ம் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை கொலை செய்துள்ளார்.

ஆயிஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த பாயிஸ், அங்கிருந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு ஜகார்த்தாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் போலீசார் அவரை சுற்றி வளைத்தபோது தப்பிக்க முயன்றுள்ளார். போலீசார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு, பின்னர் கைது செய்தனர். அவர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்.

Leave a comment